வயசு பிள்ளைகளையும் கொரோனா சும்மா விடாது.. கவனமா இல்லாட்டி அவ்ளோதான்.. ஹூ தரும் புதிய வார்னிங்
வயசு பிள்ளைகளையும் கொரோனா தாக்குமாம்
ஜெனீவா: கொரோனா வைரஸ் தாக்கம் யாருக்கெல்லாம் வரும் என்பது இப்போது பெரும் விவாதமாகியுள்ளது. வயதானவர்கள், குழந்தைகளைத்தான் அது அதிகம் பாதிக்கிறது என்று முன்பு சொன்னார்கள். ஆனால் இப்போது இளம்வயசுப் பிள்ளைகளையும் கூட அது பாதிப்பதாக புதிய தகவலை உலக சுகாதார நிறுவனம் (WHO ஹூ) வெளியிட்டு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
ஒரு பக்கம் புளியைக் கரைத்தாலும் கூட இன்னொரு பக்கம் பசும்பாலையும் வயிற்றில் வார்த்துள்ளது ஹூ அமைப்பு. அதாவது எங்கிருந்து இந்த கொரோனா வைரஸ் பரவியதோ அந்த சீனாவில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்ற தகவலை அளித்துள்ளது. இது நிச்சயம் உலகத்திற்கு மகிழ்ச்சியான செய்திதான்.
எங்கிருந்தோ வந்த இந்த கொரோனா வைரஸ் இன்று உலகையே பாடாய்ப்படுத்திக் கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கில் உயிர்களைக் காவு வாங்கி விட்டது. பல்லாயிரம் பேரை பாதித்துள்ளது. இந்த நிலையில் இந்த நோயால் யாரெல்லாம் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பது சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து ஹூ அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அட்ஹானம் ஜெப்ரியேசஸ் ஜெனீவாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "வூஹான் மாகாணத்தில் புதிதாக எந்த பாதிப்பும் பதிவாகவில்லை. இதுதான் வூஹான் மாகாணத்தில் கேஸ் பதிவாகாத முதல் நாள். இது மகிழ்ச்சிகரமான செய்தி.
இருப்பினும் நாம் இன்னும் மிகுந்த கவனத்துடன் இருந்தாக வேண்டும். நிலைமை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் சிக்கலாகலாம். ஆனால் இந்த பாதிப்பால் கிடைத்த அனுபவங்கள் பல நகரங்களுக்கும், நாடுகளுக்கும் நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. இதை உலகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும். அது பலரைக் காப்பாற்ற உதவும்.
இந்த வைரஸால் அதிக வயதானவர்களும், குழந்தைகளும்தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என முன்பு கருதப்பட்டது. ஆனால் இளம் வயதினருக்கும் கூட அபாயம் உள்ளதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர்களும் கூட வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாவார்கள். இதனால் முன்பை விட அதிக விழிப்புணர்வுடன் அனைத்து நாடுகளும் இருக்க வேண்டியது அவசியம். அவசரமும் கூட.
அனைத்து வயதினருமே கவனமுடன் இருப்பது நல்லது. நமக்கு வயது ஆகவில்லை. இளம் வயதுதானே என்று யாரும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். உங்களையும் வைரஸ் சில வாரங்களுக்கு மருத்துவமனையில் படுக்க வைத்துவிடும். கவனம் தேவை. உயிரையும் எடுக்க கூடும். எனவே இதை எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ளுங்கள்
கொரோனாவைரஸ் தொடர்பான விழிப்புணர்வு இளம் சமுதாயத்தினரிடம் அதிகம் உள்ளது. அவர்கள் இதுகுறித்து உலகம் முழுவதும் எடுத்துச் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். பாராட்டுகிறேன்" என்றார் அவர். இதற்கிடையே, இத்தாலியில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிக அளவில் உயிரிழந்துள்ளதாக ஹூ அவசர கால பிரிவு இயக்குநர் மைக்கேல் ரேயன் கூறியுள்ளார்.