கொரோனா வைரஸின் தாக்கம் மிக உக்கிரமாக தீவிரமடைகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
ஜெனிவா: கொரோனா வைரஸின் தாக்கம் மிக மிக தீவிரமடைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோன்ஸ் அதெனோம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொரோனாவால் உலகம் முழுவதும் 15,000 பேர் வரை பலியாகி உள்ளனர். மொத்தம் 3,41,000 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் மாதம் முதல் 1,00,000 பேரை கொரோனா வைரஸ் தாக்குவதற்கு 67 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆனால் தற்போது இதன் வீரியம் அதிகரித்திருக்கிறது. இப்போது இது 11 நாட்களிலேயே 1,00,000 பேரை தாக்கி இருக்கிறது. இதற்கு அடுத்ததாக வெறும் 4 நாட்களிலேயே 1,00,000 பேரை கொரோனா வைரஸ் தாக்கிவிட்டது.
இப்படி படுதீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்த உலகம் கையறுநிலையில் இருக்கிறது. இந்த தொற்றுநோயை உலகில் இருந்து விரட்டியடிக்க நம்மால் முடியும். கால்பந்தாட்டங்களில் பாதுகாப்பு ஆட்டம் மட்டுமே ஆடிக் கொண்டிருக்க முடியாது. திருப்பியும் தாக்க வேண்டியதும் கட்டாயம்.
சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மூலம் கொரோனா பரவும் வேகத்தை வெகுவாகக் குறைக்க வேண்டும். வெறும் பாதுகாப்பு வழிமுறைகளை மட்டுமே கடைபிடித்தால் கொரோனாவை வெல்ல முடியாது. கொரோனா தொற்று இருக்குமோ என சந்தேகிக்கப்படும் ஒவ்வொரு நோயாளியையும் சோதனை செய்ய வேண்டும்- அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு டெட்ரோன்ஸ் அதெனோம் கூறினார்.