"விடமாட்டோம்".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்?
ஈரான் விஞ்ஞானி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது
டெஹரான்: ஈரானே ஆடிப் போயிருக்கிறது. அந்த நாட்டின் மிகப் பெரிய அணு விஞ்ஞானியான மோஷன் பக்ரிசாத் படுகொலைச் சம்பவத்தால் ஈரான் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டெஹரானுக்கு வெளியே நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தில் மோஷன் படுகொலை செய்யப்பட்டார். இவர் ஈரான் ராணுவத்திற்காகப் பணியாற்றி வந்த அணு விஞ்ஞானி ஆவார். இவரது படுகொலைக்குப் பின்னால் மேற்கத்திய நாடுகளின் உளவுப் பிரிவுகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவர் ஒரு இயற்பியல் பேராசிரியர்... ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையில் உயர் அதிகாரியாகவும் இருந்தவர். குறிப்பாக, ஈரானிய அணு ஆயுத திட்டங்களை முன்னெடுத்து சென்றவர் இவர்தான்.. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இவர் இல்லாவிட்டால் ஒரு "அணு"வும் அசையாது.. அந்த அளவுக்கு தவிர்கக் முடியாத ஒரு நபர்!
திடீரென ஓடும் காரை மறித்து.. அணு விஞ்ஞானி சுட்டு கொலை.. ஈரானில் பயங்கரம்.. உலக நாடுகள் அதிர்ச்சி
அணு ஆயுதம்
மோஷன், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளில் மூளையாக திகழ்ந்தவர் ஆவார். இந்த கொலையில் யாருக்குத் தொடர்புள்ளது என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. மேலும் மோஷன், தனது நாட்டின் அணு ஆயுத தயாரிப்புகளில் எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று ஈரான் விளக்கம் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டு
ஆனால் ஈரானின் அணு ஆயுத உதிரி பாகங்களை இணைக்கும் பணிகளுக்கு மோஷன் முக்கியப் பங்கு வகித்ததாக மேற்கத்திய நாடுகள் நீண்ட காலமாக சொல்லி வருகின்றன. சிவில் தேவைகளுக்கான யுரேனியத்தை ஆயுதப் பயன்பாட்டுக்கு மாற்றும் பணிகளிலும் அவர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
யாருமே பார்த்ததில்லை
மோஷன் எப்போதுமே ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். அதி உயர் பாதுகாப்பு வளையத்தின் கீழ்தான் இருந்து வந்தார். ஐ.நா. சோதனைக்குக் கூட அவர் உட்படுத்தப்படவில்லை. அந்த அளவுக்கு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தார். பொது வெளியில் இவரை யாரும் அதிகமாக பார்த்ததில்லை. ஈரானுக்கு வெளியே கூட இவரை யாருக்கும் அதிகமாக தெரியாது. இவர் எப்படி இருப்பார் என்று கூட யாருக்கும் தெரியாது.
ராணுவ பயன்பாடு
2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைக்காட்சியில் உரையாற்றியபோது மோஷன் குறித்துப் பேசியிருந்தார். அவர் ரகசியமாக சிவில் அணு சக்தியை ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
பேரிழப்பு
இவரது முகமே 2011ம் ஆண்டுதான் பலருக்கும் தெரிய வந்தது. ஈரானின் தேசிய கவுன்சில் இவரது புகைப்படத்தை அப்போதுதான் வெளியிட்டிருந்தது. 1958ம் ஆண்டு ஷியா முஸ்லீம்களின் புனித நகரான குவாம் நகரில் பிறந்தவர் மோஷன். இவர் ஈரான் அமைச்சரவையில் துணை அமைச்சராகவும் இருந்துள்ளார். புரட்சிகர படையின் பிரிகேடியர் ஜெனரலாகவும் இருந்துள்ளார். டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது மரணம் ஈரான் ராணுவத்துக்குப் பேரிழப்பு என்று சொல்லப்படுகிறது.