சீனாவுக்கு அடி மேல் அடி.. இவங்களும் ஆய்வுக்கு போறாங்க.. அடுத்து என்ன நடக்குமோ!!
ஜெனிவா: நாவல் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உருவானது என்று உலக நாடுகள் சந்தேகித்து வரும் நிலையில், அங்கிருந்துதான் உருவானதா என்பது குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பு ஒரு குழுவை சீனாவுக்கு அடுத்த வாரம் அனுப்புகிறது.
நாவல் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் மார்க்கெட்டில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது. டிசம்பர் மாதம் உருவான வைரஸின் தன்மையை சீனாவினால் அப்போது கணிக்க முடியவில்லை. கணித்த பின்னரும், வுகான் பகுதியிலேயே கட்டுப்படுத்தாமல், உலக நாடுகளுக்குப் பரப்பியது.
தனது நாட்டின் மற்ற பகுதிகளுக்கு மட்டும் பரவாமல் கட்டுப்படுத்தி, வுகானில் இருந்து மற்ற நாடுகளுக்கு விமானத்தை சீனா இயக்கியது. இதனால் உலக நாடுகளில் கொரோனா வேகமாக பரவியது.
தீயாய் பரவும் கொரோனா.. மதுரையில் மீண்டும் லாக்டவுன்.. மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு.. முதல்வர் அதிரடி!
டிரம்ப் குற்றச்சாட்டு
ஜனவரி 25 ஆம் தேதி சீன நாட்டின் புத்தாண்டை கொண்டாடிய பின்னர் சீனர்கள் மற்றும் அமெரிக்கர்கள் விமானங்களில் அமரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றனர். அவ்வாறு சென்றவர்கள் மூலம் அமெரிக்காவில் பெரிய அளவில் வைரஸ் பரவியது. இதையடுத்து, சீனாவை விமர்சனம் செய்து இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'சீன வைரஸ்' என்று அழைத்தார். அதுமட்டுமின்றி, சீனாவில் ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆஸ்திரேலியா போட்ட தீர்மானம்
அத்தோடு நில்லாத டிரம்ப், உலக சுகாதார அமைப்பையும் சாடினார். சீனாவுக்கு சாதகமாக உலக சுகாதார அமைப்பு நடந்து கொள்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இதையடுத்து சீனாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் கரம் கோர்த்தன. வுகானில் ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பில் ஆஸ்திரேலியா தனிப்பட்ட முறையில் தீர்மானம் கொண்டு வந்தது. இதை இந்தியா உள்பட 160க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரித்தன. இது சீனாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஊட்டியது. ஆஸ்திரேலியா மீது பொருளாதாரத் தடை கொண்டு வரப்படும் என்று சீனா எச்சரித்தது.
ஹூ இயக்குநர்
இந்த நிலையில் சீனாவில் உலக சுகாதார அமைப்பே ஆய்வு மேற்கொள்ளும் என்று அதன் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதனனோம் கெப்ரியேசுஸ் அறிவித்தார். இதுகுறித்து டெட்ரோஸ் கடந்த ஜூன் மாதம் பேசுகையில், ''எங்கிருந்து, எப்படி நாவல் கொரோனா வைரஸ் உருவானது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இது அறிவியல் சார்ந்தது. பொது மக்களின் சுகாதாரம் சார்ந்தது. இந்த வைரஸின் தன்மையை அறிந்து கொண்டால்தான் அதை எதிர்த்து சரியான முறையில் போரிட முடியும்.
ஆய்வுக் குழு செல்கிறது
இதற்கு தயாராவதற்கு அடுத்த மாதம் எங்களது குழுவை சீனாவுக்கு அனுப்ப தயாராக இருக்கிறோம். இதன் மூலம் வைரஸ் எவ்வாறு, எப்படி தோன்றியது என்பதை அறிந்து, அதற்குத் தகுந்தவாறு எதிர்காலத்தில் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும். எனவே, அடுத்த வாரம் ஒரு குழுவை சீனா அனுப்ப திட்டமிட்டுள்ளோம் '' என்று தெரிவித்து இருந்தார்.
அமெரிக்காவின் புகார்
இதற்கு முன்னதாக, வுகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து நாவல் கொரோனா வைரஸ் வெளியானதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்து இருந்தனர். ஆனால், எந்தவித ஆதாரங்களும் இன்றி அமெரிக்கா குற்றம்சாட்டுவதாக சீனா கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த வைரஸ் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உருவானது. மிகவும் காலம் தாழ்த்தி உலக சுகாதார நிறுவனம் ஆய்வுக்கு முன் வந்துள்ளது. இதுவரை உலக அளவில் 1 கோடி பேருக்கு இந்த தொற்று பரவி, 5,25,000 பேர் உயிரிழந்துள்ளனர்.