நாம் அரசனா?.. பரம ஏழையா?னு வைரஸுக்கு தெரியாது.. விரைவில் குணமடைய வாழ்த்து.. போல்சனேரோவுக்கு ஹு
ஜெனீவா: பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு கொரோனா உறுதியானதால் அவர் விரைவில் மீண்டு வர உலக சுகாதார அமைப்பின் அதிகாரி மைக்கேல் ரயான் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வைரஸுக்கு நாம் அரசனா அல்லது பரம ஏழையா என தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. அதில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. அமெரிக்காவின் பாதிப்பில் பிரேசில் 50 சதவீத பாதிப்பை பெற்றுள்ளது.
கொரோனா பாதிப்பில் 10 இடங்களை தாண்டி இருந்தது பிரேசில். ஆனால் அதிபர் போல்சனேரோவின் அலட்சியத்தால் இன்று இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவில்லை, முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியையும் கட்டாயமாக்கவில்லை.
மாஸ்க் தேவையில்லை என்று சொன்னாரே பிரேசில் அதிபர் போன்சோனாரோ.. அவருக்கு கொரோனா! குணமடைய மோடி வாழ்த்து
பாதுகாப்பு கவசம்
மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை. செயற்கை சுவாசம், பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் அவர் வாங்கவில்லை. கொரோனா குறித்து உலக நாடுகளே பீதியில் உள்ள நிலையில் சுதந்திரமாக நடமாடுங்கள் என பிரசாரம் செய்தவர் அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனேரோ.
3 முறை நெகட்டிவ்
கொரோனா வைரஸை இது ஒரு சாதாரண காய்ச்சல் என கூறி வந்தார். எங்கும் சென்றாலும் முகக் கவசம் அணியாததையே வாடிக்கையாக கொண்டிருந்தார். பின்னர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தவுடன் அவர் முகக் கவசம் அணிகிறார். பொது முடக்கத்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்தவர். இதுவரை அவருக்கு 3 முறை கொரோனா சோதனை எடுக்கப்பட்டு நெகட்டிவ் என வந்துள்ளது.
தனிமை
இந்த நிலையில் அதிபருக்கு லேசான அறிகுறிகளுடன் வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். கூட்டங்களில் பங்கேற்க போவதில்லை என்றும் அறிவித்தார். அவரது மனைவி மைக்கில் போல்சனேரோவுக்கும் கொரோனா வைரஸாம். இதையடுத்து இருவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
குணமாகிய மக்கள்
இதையடுத்து போல்சனேரோ விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்தியுள்ளார்கள். அது போல் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோமும், போல்சனேரோ விரைவில் குணமாகி மக்கள் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
அரசனா? அல்லது பரம ஏழையா?
அது போல் உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரியான மைக்கில் ரயான் கூறுகையில் பிரேசில் அதிபர் போல்சனேரோ கொரோனாவிலிருந்து குணமடைய வாழ்த்துகிறோம். உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்த அனுபவத்தை சந்தித்துள்ளனர். இந்த சம்பவம் வைரஸ் குறித்த உண்மைத் தன்மையை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு நாம் அனைவரும் இலக்குகள் தான். வைரஸுக்கு நாம் அரசனா அல்லது பரம ஏழையா என தெரியாது என்றார் ரயான்.