எல்லையில் இந்தியா செய்த மாஸ் செயல்.. திடீரென மீண்டும் பொங்கி எழுந்த சீனா.. பின்னணி என்ன?
பெய்ஜிங்: இந்திய ராணுவத்தினர் சுமூகமாக வந்து செல்வதற்காக, இந்தியாவின் வடக்கு எல்லைகளில் தரமான சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 44 பாலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா,. இந்தியா எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருவதுதான் எல்லையில் தற்போதைய பதட்டங்களுக்கு மூலக்காரணம் என அபாண்டமாக குற்றம்சாட்டி உள்ளது.
இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்க இருதரப்பும் தொடர்ந்து பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தின. ஒருகட்டத்தில் நிலைமையை சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையையும் இருதரப்பும் மேற்கொள்ளக்கூடாது என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. பதற்றத்தை தணிக்க படைகளை விலக்கவும் ஒப்புக்கொண்டன.
இந்நிலையில் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள லடாக், ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் எளிதாக செல்வதற்காக 44 பாலங்ளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
ராஜ்நாத் சிங் பேச்சு
பாலங்களை திறந்து வைத்து ராஜ்நாத் சிங் பேசுகையில், இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் நிலவும் சூழ்நிலை உங்களுக்கு நன்றாக தெரியும். முதலில் பாகிஸ்தானும் இப்போது சீனாவும் எல்லை பிரச்சனையை உருவாக்கி வருகின்றன.. பதற்றம் நிலவும் இந்த இரு நாடுகளுடனும் இந்தியா சுமார் 7,000 கிலோ மீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள 44 பாலங்களில் ஏழு பாலங்கள் லடாக் பிராந்தியத்தில் வருகின்றன. இந்த பாலங்கள் பயன்பாட்டுக்கு வருவது பொது மக்களுக்கும் பயன் அளிக்கும் என்றார்.
எல்லை பதட்டம்
எல்லையில் பாலங்கள் திறந்திருப்பதை சுட்டிக்காட்டி இந்தியாவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷாவோ லிஜியன் இது பற்றி கூறுகையில், எல்லைப்பகுதியில் இந்தியா உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருவதே இந்தியா மற்றும் சீனா இடையிலான பதற்றத்திற்கு மூல காரணம். பதற்றத்தை உண்டாக்கும் வகையிலான எந்த நடவடிக்கைகளையும் இரு நாடுகளும் மேற்கொள்ளக்கூடாது.
சாலை உள்கட்டமைப்பு
எல்லைப் பகுதியில் ராணுவ மோதலை உண்டாக்கும் நோக்கில், இந்தியா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். இருநாடுகளும் ஒப்புக்கொள்ளப்பட்டபடி எல்லைப் பகுதியில் அமைதியை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்துகிறது" என்றார்.
அருணாச்சல பிரதேசத்துக்கும் எதிர்ப்பு
லடாக் யூனியன் பிரதேசம் என்று அழைக்கப்படுவதை, சீனா அங்கீகரிக்கவில்லை என்று கூறிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன், அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தை இந்தியா சட்டவிரோதமாக அமைத்துள்ளது என்று விமர்சித்தார்.
எங்கள் எல்லை பகுதி
இதற்கு முன்னதாக விளக்கம் அளித்த இந்தியா. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தங்கள் எல்லை பகுதிக்கு உள்ளே பக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. லடாக்கில் எல்லைப் பகுதிகளில் சாலைகள் அமைப்பதை சீனா பலமுறை ஆட்சேபித்த போதிலும்,இதுவரை சீனா உள்கட்டமைப்பு தொடர்பான பணிகளைத் தடுத்தது இல்லை.
சீனாவின் திடீர் அறிக்கை
எனினும் சீனாவின் இந்த அறிக்கை, இந்திய மற்றும் சீன வீரர்கள் அமைதியை கடைபிடித்து வரும் இந்த நேரத்தில் மீண்டும் ஒரு தவறான நிலைப்பாட்டை சீனா எடுக்குமோ என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது. இந்தியாவை சத்தம்போடும் சீனா, எல்லையில் இந்தியாவைவிட பலமடங்கு உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது.