காஷ்மீரில் மோடி செய்ததை.. ஹாங்காங்கில் சீனா செய்ததால் வெடித்த புரட்சி.. களத்தில் குதித்த இளைஞர்கள்!
Recommended Video
ஹாங்காங்: சீனாவிற்கு எதிராக ஹாங்காங்கில் மக்கள் தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். தொடர்ந்து இரண்டு மாதமாக அங்கு பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தியாவுடன் காஷ்மீர் பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான் சேர்ந்தது. அதில் முதல் விஷயம், காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம். அதையும் தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கி உள்ளது.
ஆனால் காஷ்மீரில் புரட்சி வெடிக்க விடாமல் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் மனநிலை என்ன என்பது கூட தற்போது யாருக்கும் தெரியவில்லை என்பதுதான் இருப்பதிலேயே கொடூரமான விஷயம்.
ஹாங்காங் என்ன
ஹாங்காங்கிலும் இதேதான் தற்போது பிரச்சனை. ஹாங்காங் சீனாவுடன் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து பிரிந்து, 1997ல் இணைந்தது. ஆனால் அப்போது காஷ்மீரில் போடப்பட்டது போலவே ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. அதன்படி நாங்கள் சீனாவுடன் இருப்போம். ஆனால் எங்களுக்கு சட்டம் வேறு மாதிரி இருக்கும். எங்களுக்கு தனி அதிகாரம் கொண்டு ஆட்சியாளர்கள் இருப்பார்கள்.
சீனா கட்டுப்பாடு
ஆனால் சீனா ராணுவத்தை பயன்படுத்துவோம். சீனாவில் இயற்றப்படும் சட்டங்களை ஆராய்ந்து ஹாங்காங்கில் இயற்றுவோம். தேர்தல் ஒரே அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் நடக்கும். இப்படி காஷ்மீருக்கு இந்தியா கொடுத்த சிறப்பு அதிகாரத்தை அப்படியே சீனா ஹாங்காங்கிடம் கொடுத்து, தன்னுடன் இணைத்துக் கொண்டது.
என்ன திட்டம்
இதை கடந்த 20 வருடங்களில் பல முறை நீக்குவதற்கு சீனா முயன்று இருக்கிறது. அதாவது ஹாங்காங் சிறப்பு அதிகாரத்தை நீக்கிவிட்டு மொத்தமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா முயன்று கொண்டு இருக்கிறது. இந்த சிறப்பு அதிகாரத்தை நீர்த்து போக செய்யும் வகையில் கடந்த சில வருடங்களாக அங்கு சட்டங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது.
போராட்டங்கள்
இதற்கு எதிராக அங்கு மக்கள் அடிக்கடி போராட்டம் செய்து வருவது வழக்கமாகி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களில்தான் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து ஹாங்காங் மக்கள் களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள். ஆனால் இவர்களை சீனா தனது ராணுவத்தை ஏவி கைது செய்வது, கொடுமை செய்வது, கொலை செய்வது என்று பல அடக்குமுறைகளை ஏவி முடக்க முயன்று வருகிறது.
இப்போது என்ன
இப்போது ஹாங்காங் ஆட்சியாளராக இருந்து நிர்வகித்து வரும் கேரி லாம் கூட சீனாவின் பேச்சை கேட்கும் நபர்தான். அவரும் சீனாவிற்கு ஆதரவான நபர். இதனால் அவரை பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் மக்கள் களமிறங்கி போராடி வருகிறார்கள். ஆனால் இந்த போராட்டங்களுக்கு பின் இன்னொரு முக்கியமான காரணம் உள்ளது.
ஏன் இப்போது
அதன்படி சீனாவில் புதிதாக நாடுகடத்தல் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இதை ஹாங்காங்கில் கொண்டு வர சீனா முயன்று அந்த மசோதாவை தாக்கல் செய்தது. இதன் மூலம் ஹாங்காங்கில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் எளிதாக நாடு கடத்த முடியும். சீனாவிற்கு எதிராக பேசும் யாரையும் ஹாங்காங்கில், ஹாங்காங் ஆட்சியாளர் அனுமதி இன்றி நாடு கடத்த முடியும். அவர்களை சீனா உள்ளிட்ட எங்கும் நாடு கடத்த முடியும்.
திட்டம் என்ன
இதன் மூலம் ஹாங்காங் அரசியல்வாதிகள் முடக்கப்படுவார்கள். அதேபோல் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் ஹாங்காங் போராளிகள், மக்கள் வருவார்கள். சிறிய போராட்டம் கூட நாடு கடத்தல் மூலம் முடக்கப்படும். இதனால் ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரம் எளிதாக முடக்கப்படும். இதனால் தற்போது அதை எதிர்த்து மக்கள் அங்கு போராடி வருகிறார்கள்.
எத்தனை
மக்கள் என்றால் ஆயிரம், பத்தாயிரம் பேர் அல்ல. சுமார் 6-7 லட்சம் பேர் தினமும் சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள். ரயில் நிலையம், விமான நிலையம், சாலை , கல்லூரி என்று தினமும் 7 லட்சம் பேர் வரை சாலையிலேயே தூங்கி, சாப்பிட்டு அங்கேயே போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜூன் மாதம் தொடங்கிய இந்த போராட்டம் தற்போது உச்சம் அடைந்துள்ளது.
விமான நிலையம்
தமிழகத்தில் போராளிகள் மத்திய அரசின் ரயிலை மறித்து, போராட்டத்தை தேசிய லெவலில் வைரலாக்குவது போலத்தான் தற்போது ஹாங்காங்கில் போராளிகள் ஒரு விமான நிலையத்தையே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். ஆம், ஹாங்காங் விமான நிலையம் தற்போது அந்நாட்டு இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
உலகம் முழுக்க
இதனால் தற்போது உலகம் முழுக்க அந்த ஹாங்காங் போராட்டம் வைரலாகி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கி உள்ளது. சீனாவை இந்த போராட்டம் மொத்தமாக உலுக்கி உள்ளது என்றுதான் கூற வேண்டும்.