இந்த விமான நிலையத்தில் ஓடிக்கிட்டே இருக்கலாம்!
டோக்கியோ: ஜப்பானில் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளதையொட்டி நரிதா சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்துள்ளனர்.
வரும் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடக்க உள்ளது. இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள நரிதா சர்வதேச விமான நிலையித்தில் புதிதாக ஒரு முனையத்தை திறந்துள்ளனர்.
விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பது எல்லாம் ஒரு பெரிய செய்தியா என்று கேட்டால் ஆமாம் என்று தான் கூற வேண்டும். காரணம் அந்த முனையத்தில் உள்ள பாதைகள் ஓட்டப்பந்தய டிராக் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதையை ரப்பரை வைத்து டிராக் போன்று செய்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடைபெற உள்ளதை குறிக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இந்த முனையத்தை அமைக்க வழக்கமாக ஆகும் செலவை விட பாதி தான் செலவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் விமான பயணம் அளிக்கும் நிறுவனங்களின் விமானங்களுக்காகவே இந்த முனையம் திறக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஒலிம்பிக் போட்டிகளை மனதில் வைத்து இந்த முனையத்தை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.