இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை ஏன் உலக நாடுகள் அங்கீகரிக்க கூடாது தெரியுமா?
Recommended Video
வாஷிங்டன்: இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை அங்கீகரித்துள்ள, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தங்கள் நாட்டு தூதரகத்தை ஜெருசலேத்தில் அமைக்க ஆயத்தமாகியுள்ளார். இதுவரை அமெரிக்க தூதரகம் டெல் அவிவ் நகரில்தான் இயங்கி வருகிறது.
டிரம்பின் நடவடிக்கை உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இவ்வாறு டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றன என்பதை தெரிந்து கொள்ள, புனித நகரமான, ஜெருசலேத்தின் பின்னணி என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சிரியா, எகிப்து மற்றும் ஜோர்டான் நடுவேயான போரின் முடிவில், 1967ல் ஜெருசலேமின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு
ஜெலுசலேத்தின் மேற்கு பகுதியை 1948ம் ஆண்டு, அரபு-இஸ்ரேல் யுத்தத்தின் முடிவில் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் ஜெருசலேத்தின் உரிமையை இஸ்ரேல் கொண்டாடியபோதிலும், அதை சர்வதேச சமூகமோ, அமெரிக்காவுமோ கூட இதுவரை ஏற்கவில்லை. ஆக்கிரமிப்பு நகரம் என்றே சர்வதேச சமூகம் அதை பார்க்கிறதே தவிர, இஸ்ரேலின் உரிமை என்று அதை சர்வதேச சமூகம் ஏற்கவில்லை.
ஜெருசலேமிற்கு சிறப்பு அந்தஸ்து
பாலஸ்தீனம்-இஸ்ரேல் நடுவேயான மோதலை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் இருக்க முக்கிய காரணம், ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் முடிவு எட்டப்படாமல் இருப்பதுதான். 1947ம் ஆண்டு, ஐநா சபையின், எல்லை பிரிப்பு திட்டப்படி, ஜெருசலேமிற்கு சிறப்பு ஸ்டேடஸ் கொடுக்கப்பட்டது. அதாவது, சர்வதேச கட்டுப்பாட்டின்கீழ் அந்த நகரம் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஜெருசலேத்தின் மதம் சார்ந்த முக்கியத்துவங்களுக்காக இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. 3 ஆபிரகாமிய மதங்களுக்கு (Abrahamic religions) ஜெருசலேம் முக்கிய நகரமாகும்.
சர்வதேச சட்டங்ளுக்கு எதிரானது
1948ம் ஆண்டு போரில், ஜியோனிஸ்ட் (யூத இயக்கத்தினர்) படைகள் ஜெருசலேத்தின் மேற்கு பகுதிகளை கைப்பற்றி, இஸ்ரேலுடன் அது இணைந்த பகுதி என அறிவித்தனர். 1967ம் ஆண்டு போரில், ஜெருசலேத்தின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் பிடித்தது. அப்பகுதி முன்னதாக ஜோர்டான் வசம் இருந்தது. இஸ்ரேல் சட்ட திட்டங்களை அங்கே அமல்படுத்தி, தங்கள் நாட்டின் எல்லைக்குள் அதை கொண்டுவந்தது. இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது.
ஜெருசலேம் தலைநகரமானது
1980ம் ஆண்டு, ஜெருசலேம் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இஸ்ரேல் பிறப்பித்து, இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்று அறிவித்தது. இதற்கு பதிலடியாக, ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில், 1980ல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, இஸ்ரேலின் சட்டம் செல்லாது என அறிவித்தது. கிழக்கு ஜெருசலேம் ஒரு ஆக்கிரமிப்பு பகுதி மட்டுமே என்றுதான் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் அறிவித்தன.
ரஷ்யா அறிவிப்பு
இதுவரை உலகில் எந்த நாடுமே ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகரம் என அறிவிக்காமல்தான் இருந்தன. இந்த ஆண்டு துவக்கத்தில் ரஷ்யாதான் முதல் நாடாக, மேற்கு ஜெருசலேத்தை, இஸ்ரேல் தலைநகரம் என அங்கீகரித்தது. இப்போது அமெரிக்காவும் அதே வழியை பின்பற்றியுள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் பிடித்த ஒரு நகரை அங்கீகரிப்பது என்பது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது.
பாலஸ்தீனியர்களுக்கு பாரபட்சம்
கிழக்கு ஜெருசலேத்தை தங்கள் பகுதி என்று இஸ்ரேல் அறிவித்தாலும்கூட, அங்கு வாழும் பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் குடியுரிமை வழங்கப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அப்பகுதியில் வாழும் 420,000 பாலஸ்தீனியர்களுக்கு நிரந்தர குடியுரிமை என்ற பெயரில் ஒரு அடையாள அட்டைதான் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜோர்டான் நாட்டு பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில் தேச அடையாள எண் கிடையாது. அப்படியானால் அவர்கள் முழுக்க ஜோர்டான் நாட்டு குடிமக்களும் கிடையாது. ஜோர்டானில் பணியாற்ற அனுமதி பெற்றுக்கொள்ள முடியுமே தவிர இவர்களால் அந்த நாட்டு அரசு வழங்கும் சலுகைகளை அனுபவிக்க முடியாது.
அகதிகளாக நடத்தும் இஸ்ரேல்
ஜெருசலேம் நகரில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் நிலைமை இன்னும் மோசம். அவர்களை நாடற்றவர்கள் என்றும் வரையறுக்கலாம். சட்ட சிக்கலின் நடுவே சிக்கியுள்ளனர். இஸ்ரேல் குடிமக்களாகவும் அவர்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஜோர்டான் அல்லது பாலஸ்தீன நாட்டின் குடிமக்களாகவும் அவர்கள் அங்கீகரிக்கப்படவில்லை. கிழக்கு ஜெருசலேத்தில் வசிக்கும் பாலஸ்தீனியர்களை, வெளிநாட்டு அகதிகள் என்றே இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அச்சத்தின் பாலஸ்தீனியர்கள்
ஜெருசலேமிலேயே பிறந்து வளர்ந்திரு்தாலும் பாலஸ்தீனியர்கள் அகதிகளாகவே பார்க்கப்படுகிறார்கள். தங்களது குடியுரிமை எப்போது பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். குறிப்பிட்ட காலம் கூட அவர்கள் ஜெருசலேத்தை விட்டு வேறு நாட்டில் வசிக்க முடியாது. மேற்கு கரை பகுதியில் கூட அவர்கள் வசிக்க முடியாது. அவ்வாறு செய்தால் குடியுரிமை பறிபோகும் அச்சம் உள்ளது.
யூதர்களுக்கு தனி சலுகை
அதேநேரம், யூதர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், இஸ்ரேலில் குடியேறும் உரிமையை பெற்றவர்கள். இஸ்ரேலின் சட்டப்படி, அவர்கள் இஸ்ரேல் குடிமக்களாக மாறிக்கொள்ள முடியும். 1967 முதலே ஜெருசலேமில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் நிலைமை இப்படி அந்தரத்தில்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சொர்க்கபுரி
ஐநாவின் தடையையும் மீறி யூதர்களை பெருமளவில் ஜெருசலேமில் குடியமர்த்தி வருகிறது இஸ்ரேல். பாலஸ்தீனர்களுக்கு ஜெருசலேம் அந்நிய நகரமாக்கப்பட்டு, இஸ்ரேலியர்களுக்கு அது சொர்க்கபுரியாக மாற்றப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நகரம், பாரபட்சம் என பல்வேறு சர்ச்சைகளுக்கு நடு நாயகமாக உள்ளதால்தான் புனித நகரமான ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகரமாக அறிவிக்க கூடாது என்பதில் உலக நாடுகள் ஒரே கண்ணோட்டத்தில் உள்ளன.