ஏமன் விவகாரத்தில் நடுநிலை வகிக்கும் பாக்: செளதிக்கு உதவ தீவிரவாதி ஹபீஸ் சையீத் வலியுறுத்தல்!!
இஸ்லாமாபாத்: ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செளதி அரேபியா தலைமையில் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் தங்களுடன் கை கோர்க்குமாறு செளதி விடுத்த வேண்டுகோளை பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது.
இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் 5 நாட்கள் விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தின் முடிவில் செளதி அரேபியாவுடனான நட்புறவு தொடரும்.. அந்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க தோளோடு தோள் நிற்போம்.. ஏமன் விவகாரத்தில் நடுநிலை வகிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் செளதி மிகவும் நெருங்கிய நட்பு நாடு. 1999ஆம் ஆண்டு பர்வேஷ் முஷாரப்பால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்புக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியது செளதிதான்.. இருந்த போதும் செளதி உதவி கேட்ட நேரத்தில் ஆதரவு கொடுக்காமல் நாடாளுமன்றத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றிருக்கிறார்.
இதற்கு காரணமாக சொல்லப்படுவது என்னவெனில், ஏமன் மீதான செளதியின் யுத்தம் சரியானது அல்ல என்றுதான் நவாஸ் ஷெரீப் கருதுகிறாராம். 1960களில் இதேபோல் ஏமனில் எகிப்து யுத்தம் நடத்தியது. ஆனால் தமது நாட்டின் 20 ஆயிரம் ராணுவத்தினரை எகிப்து இழக்க வேண்டியிருந்தது. அப்போது இதே ஜய்தி பழங்குடிகளுடன்தான் யுத்தம் நடைபெற்றது.
தற்போது மீண்டும் செளதிக்கு அப்படி ஒரு நிலைமை வந்துவிடுமோ என நவாஸ் ஷெரீப் கருதுகிறாராம். அதே நேரத்தில் செளதியுடனான நட்புறவு சீர்குலைந்துவிடக் கூடாது என்பதாலும் நாடாளுமன்றத்தை நாடி பொதுக்கருத்தை உருவாக்கினால் செளதியின் கோபத்தை சற்று தணிக்க முடியும் என ஷெரீப் கருதியிருக்கிறார்.
இப்படி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது பாகிஸ்தானுக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜரீப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் பிரதமர் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதியையும் சந்தித்து பேசியிருந்தார். ஈரானை பகைத்துக் கொண்டு செளதியுடன் கை கோர்த்தால் ஷியா முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட நேரிடும் என்பதும் பாகிஸ்தான் பிரதமரின் அச்சமாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே ஏமன் விவகாரத்தில் செளதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் உதவியாக வேண்டும் என்று ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சையீத் வலியுறுத்தி உள்ளார். லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய சையீத் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய நிலையில் ஏமன் -செளதி விவகாரம் பாகிஸ்தானில் பெரும் உள்நாட்டு குழப்பத்தை உருவாக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.