பத்திரமாக ஒப்படைத்த பிரிட்டன்.. வார்த்தை தவறிய சீனா.. வீறுகொண்ட போராட்டம்.. இது ஹாங்காங்கின் கதை!
ஹாங்காங்: ஜனநாயகத்துக்கான அமைதிவழி போராட்டங்களால் ஹாங்காங் இன்னமும் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கிறது.. தீர்வு காண வேண்டிய சீன தேசமோ ஒட்டுக்குமுறைகளை திணித்துக் கொண்டே இருக்கிறது.
1842 -ம் ஆண்டு முதல் பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது ஹாங்காங். பின்னர் 1898 முதல் 99 ஆண்டுகால குத்தகைக்கு ஹாங்காங்கை பிரிட்டன் கைவசப்படுத்தியது. 2-ம் உலகப் போரின் போது சில ஆண்டுகள் ஜப்பான் வசம் இருந்தது ஹாங்காங்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்.. மகிந்த ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து
பிரிட்டனுன் பேச்சுவார்த்தை
பின்னர் 1945-ம் ஆண்டு முதல் மீண்டும் பிரிட்டன் வசமானது ஹாங்காங். சீனாவின் உள்நாட்டு யுத்தத்தால் அந்நாட்டு அகதிகளால் ஹாங்காங் நிறைந்து வழிந்தது. ஹாங்காங்கை தங்களது வசம் ஒப்படைக்க கோரி பிரிட்டனுடன் சீனா பல ஆண்டுகாலம் பேச்சுவார்த்தை நடத்தியது.
சீனாவிடம் ஹாங்காங்
இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் 1997-ல் ஹாங்காங் சீனாவிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. சீனாவின் சுயாட்சி பிரதேசமாக ஹாங்காங் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் சீனா தனது ஒடுக்குமுறையை ஹாங்காங் மீது ஏவியது. ஹாங்காங்கை தமது ஒருங்கிணைந்த பகுதியாக்கிக் கொள்வதே சீனாவின் இலக்காக இருந்து வருகிறது. இதனால் ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் கடந்த பல ஆண்டுகளாக வெடித்து வருகின்றன. சீனா நிறைவேற்றுகிற சட்டங்கள், ஹாங்காங்கின் இறையாண்மைக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானது என்பது புகார்.
ஒடுக்குமுறையும் போராட்டமும்
2019-ல் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் மசோதா கொண்டுவரப்பட்டது. இது ஹாங்காங்கில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அதிஉச்ச ஜனநாயக வழியில் ஹாங்காங் மக்கள் அமைதி வழி போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். பணிநேரத்துக்குப் பின்னர் போராடுவது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காமல் இருப்பது என்பது ஹாங்காங் போராட்டங்களின் முக்கிய அம்சம்.
பிடிவாதம் காட்டும் சீனா
இதனால் ஹாங்காங்கில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமலேயே போராட்டங்கள் தொடருகின்றன. இதனையடுத்து தற்போது தேசிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை சீனா கொண்டுவர உள்ளது. இதற்கும் ஹாங்காங்கில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இதனால் ஹாங்காங் மீண்டும் போராட்ட களமாகி உள்ளது. இப்போது ஹாங்காங் மக்களுடன் உலக நாடுகள் கை கோர்த்துள்ளன. சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக 200 நாடுகளின் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சீனா, அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சீனாவின் பிடிவாதம் நீடிக்கிறது. ஹாங்காங்கில் போராட்ட களம் தொடருகிறது.
Recommended Video
சீனாவின் சர்வாதிகாரம்
சீனா நிறைவேற்றுகிற அல்லது முன்னெடுக்கிற ஒவ்வொரு நடவடிக்கையும் தங்களை சீனாவின் அடிமைகளாக்கிவிடும் என்பது ஹாங்காங் மக்களின் கருத்து. பிரிட்டனிடம் இருந்து ஹாங்காங்கை பெறும் போது, ஒரு நாடு- 2 அமைப்புகள் என்கிற சுயாட்சி அதிகாரம் நீடிக்கும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதியை தகர்த்து ஒற்றை சீனாவுக்குள் ஹாங்காங் என்கிற எதேச்சதிகாரப் போக்குடன் செங்கொடி தேசம் சட்டாம்பிள்ளைத்தனமாக நடக்கிறது. இதுதான் அத்தனை அக்கப்போர்களுக்குமே அடித்தளமும் கூட!