கத்தார்-அரபு நாடுகளின் மோதல் இந்தியாவுக்கு நல்லதல்ல!
தோஹா: பஹ்ரைன், எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் ஆகிய நான்கு நாடுகளும் கத்தார் நாட்டிற்கான தூதரக உறவுகளை இன்று முற்றிலுமாக துண்டித்துவிட்டன. தீவிரவாதிகளுக்கு ஆதரவு, ஈரானுக்கு ஆதரவு என இதற்கான காரணங்களை அடுக்குகின்றன சக அரேபிய நாடுகள்.
கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் இந்தியாவுக்கு நல்ல செய்தி அல்ல. இந்த சூழ்நிலையில், பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்புவதை தவிர .இந்தியா நடுவே சென்று பெரிதாக எதுவும் செய்ய முடியாது.
கத்தாரில் 80 லட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் தமிழர்கள் மற்றும் மலையாளிகள். இந்தியாவின் எனர்ஜி துறை அளிப்பிற்கு கத்தார் இன்றியமையாததாகும்.
பயணங்கள்
விமானம் அல்லது கப்பல் பயணங்கள், கத்தார் நாட்டில் வாழும் இந்தியர்களின் முதல் கவலையாக இருக்கிறது. அரபு நாடுகளுடனான விமான சேவைகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், இந்தியர்கள் அங்கு சிக்கலில் மாட்டிக்கொள்ளவில்லை என்பதை இந்திய அரசு உறுதிசெய்துள்ளது.
ஏற்றுமதி, இறக்குமதி
எனர்ஜி மற்றும் பாதுகாப்பு துறையில் கத்தாரும், இந்தியாவும் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளன. கத்தாரின் டாப் ஏற்றுமதி நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல கத்தாரின் டாப் இறக்குமதி நாடுகள் வரிசையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயை (எல்என்ஜி), இந்தியாவுக்கு அதிகப்படியாக சப்ளை செய்யும் நாடுகளில் முக்கியமானது கத்தார்.
17 பில்லியன் டாலர் வணிகம்
இந்தியா இறக்குமதி செய்யும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 65 சதவீதம் கத்தார் நாட்டில் இருந்துதான் வருகிறது. அதேபோல கத்தாரிலிருந்து இந்தியா அம்மோனியா, யூரியா, எதிலேன் மற்றும் புரோபிலேன் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறது. இரு நாடுகள் இடையேயான வர்த்தக உறவுகளின் ஆண்டு மதிப்பு 17 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
இந்திய ஏற்றுமதி
கத்தாருக்கு இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்வது, மிஷின்கள் மற்றும் உபகரணங்கள், இரும்பு, பிளாஸ்டிக், கட்டுமான பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகள், ரசாயனங்கள், ரப்பன், மசாலா பொருட்கள், மற்றும் பருப்பு வகைகளாகும். கத்தாருக்கு நெருக்கடி அதிகரித்திருப்பது இந்தியாவுடனான வர்த்தக உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.