"காசா மக்களை இஸ்ரேல் பாதுகாக்கணும்.." திடீரென டோனை மாற்றும் அமெரிக்க அதிபர் பைடன்.. இது மேட்டரே வேற
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் சண்டை தொடரும் நிலையில், திடீரென அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசிய அதிபர் பைடன் சில முக்கிய கருத்துகளை வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் சண்டை தொடரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக யுத்தம் தொடர்ந்து வருகிறது. முதலில் கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. சமீப காலங்களில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுதான் மோசமான தாக்குதலாகும்.

இதையடுத்து இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், மேலும் படையெடுப்பை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனால் அங்கே பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
இஸ்ரேல் யுத்தம்: இஸ்ரேல் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், காசாவில் தொடரும் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைப்பேசியில் உரையாடினார். அப்போது தான் அவர் காசாவில் இருக்கும் அப்பாவி மக்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து தனது பொதுமக்களைப் பாதுகாக்கும் உரிமை இஸ்ரேலுக்கு இருக்கிறது என்று மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்த பைடன், பிணையக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையும் தொடர்ந்து நடந்து வருவதாகத் தெரிவித்தார். காசாவில் ஹமாஸ் மற்றும் பொதுமக்களை வேறுபடுத்த வேண்டும் என்றும் அப்பாவி காசாவில் வசிக்கும் மக்களை இஸ்ரேல் பாதுகாக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
பைடன் சொன்ன முக்கியமான மேட்டர்: மேலும், காசா மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் உடனடியாக அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும் பைடன் வலியுறுத்தினார். போர் தொடரும் நிலையில், திடீரென காசாவில் உள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டியது இஸ்ரேலின் கடமை என்று பைடன் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அதிபர் பைடன் இன்று காலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார். காசாவில் இப்போது இருக்கும் நிலை குறித்து இரு தரப்பு தலைவர்களும் விவாதித்தனர். பயங்கரவாதத்திலிருந்து தனது மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இஸ்ரேலுக்கு இருக்கிறது என்பதை பைடன் மீண்டும் வலியுறுத்தினார்.
பிணையக் கைதிகள்: அதேநேரம் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்க அதைச் செய்ய வேண்டும் என்பதையும் அதிபர் வலியுறுத்தினார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஹமாஸ் வசம் பல அமெரிக்கர்கள் பிணையக் கைதிகளாக இருக்கும் நிலையில், அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இஸ்ரேல் நாட்டில் போர் தொடங்கியது முதலே அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். யுத்தம் ஆரம்பித்த பிறகு பல முறை இரு தலைவர்களும் தொலைப்பேசி வழியாகப் பேசியுள்ளனர். அதை எல்லாம் தாண்டி இஸ்ரேலுக்கு ஆதரவு தரும் வகையில், அதிபர் பைடன் நேரடியாகவே இஸ்ரேல் நாட்டிற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்: இஸ்ரேலுக்கு ஆதரவு தரும் அதேநேரம் இந்தப் போர் அங்கே பிராந்தியம் முழுக்க பரவக் கூடாது என்பதிலும் அமெரிக்கா கவனமாக இருக்கிறது. இதன் காரணமாகவே காசா மீதான படையெடுப்பை நடத்த வேண்டாம் என்று இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது.












Click it and Unblock the Notifications