சொல்லிப் பார்த்தும் கேட்கலை.. அடங்கலை.. அதான் அடிச்சோம்.. சீனாவுக்குப் போய் விளக்கிய சுஷ்மா
பாகிஸ்தானில் நேற்று அதிகாலை புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது ஏன் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீனாவில் விளக்கி இருக்கிறார்.
Recommended Video
பெய்ஜிங்: பாகிஸ்தானில் நேற்று அதிகாலை புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது ஏன் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீனாவில் விளக்கி இருக்கிறார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீனா சென்று இருக்கிறார். 16வது இந்தியா - சீனா - ரஷ்யா வெளியுறவுத்துறை சந்திப்பில் கலந்து கொள்ள அவர் சீனா சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு நடத்தி உள்ளார். சீனாவில் நடக்கும் இந்த மாநாட்டில் பாக். மீது சுஷ்மா கடுமையான விமர்சனங்களை வைத்தார். பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து சுஷ்மா சீனாவில் விளக்கம் அளித்தார்.
புல்வாமா சம்பவம்
சுஷ்மா தனது பேச்சில், புல்வாமா தாக்குதலை ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது பாகிஸ்தானில் இயங்கி வரும் அமைப்பு ஆகும். ஜெய்ஷ் இ முகமது தாக்குதலில் நாங்கள் 40 வீரர்களை பலி கொடுத்தோம். தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும். எந்த விதமான இரக்கமும் இன்றி நாம் தீவிரவாதத்தை அழிக்க வேண்டும்.
பாகிஸ்தான் மறுப்பு
புல்வாமா தாக்குதலை பாக். தொடர்ந்து மறுத்து வந்தது. ஜெய்ஷ் இ முகமது தாக்குதலை நடத்தவில்லை என்று பாக். கூறியது. உலக நாடுகள் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், ஆனால் பாகிஸ்தான் மட்டும் எப்போதும் போல எதுவும் நடக்காத மாதிரி இதை மறுத்தது.
தொடர்ந்து நடக்கும்
ஜெய்ஷ் இ முகமது இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டது.ஆனால் பாகிஸ்தான் இதை ஏற்க மறுத்து வருகிறது. இதனால் ஜெய்ஷ் இ முகமது மீது பதில் தாக்குதல் நடத்த இந்தியா முடிவெடுத்தது. ஆனால் மக்கள் பாதிக்காத வகையில் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது.
|
ராணுவம் இல்லை
நாங்கள் நடத்தியது ராணுவ - ராணுவ தாக்குதல் கிடையாது.பாக். ராணுவம் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை.ஜெய்ஷ் இ முகமது முகாம் மீது மட்டுமே தாக்குதல் நடத்தினோம். ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை மொத்தமாக அழிக்கவே இந்த தாக்குதல் என்று சுஷ்மா பாகிஸ்தானுக்கு எதிராக பேசியுள்ளார்.