பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் குண்டாக என்ன காரணம் தெரியுமா?
பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் குண்டடிக்க என்ன காரணம் என்பது குறித்து ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
Recommended Video
வாஷிங்டன்: திருமணத்திற்கு முன்பு வரை பெண்கள் ஒல்லிப் பிச்சானாக இருப்பார்கள். ஆனால் திருமணம் ஆகி, குழந்தைப் பேறும் உண்டான பின்னர் குண்டடித்து விடுவார்கள். அதன் பிறகு மீண்டும் ஸ்லிம் ஆக முயற்சித்து முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம் ஏராளம். இதற்கெல்லாம் என்ன காரணம் என்பது குறித்து அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியை ஓல்கா யகுசேவா ஒரு ஆய்வு ஒன்றை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளார்.
உண்மையில் இதில் அறிவியல் தொடர்பான காரணங்கள் பெரிதாக இல்லை என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். மாறாக, குழந்தை பெற்ற பிறகு குழந்தையுடன் சேர்ந்து அதிக நேரம் உட்கார்ந்திருப்பது, டிவி பார்ப்பது, கதை புத்தகம் படிப்பது மற்றும் குழந்தைகள் விட்டு வைக்கும் உணவுப் பொருட்கள், ஸ்னாக்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது ஆகியவைதான் பெண்கள் உடல் பருமன் அதிகரிக்க முக்கியக் காரணம் என்று கூறியுள்ளார் ஓல்கா.
குழந்தைகளுடன் உள்ள பெண்கள் மற்றும் குழந்தை இல்லாத பெண்கள் என இரு தரப்பினரிடமும் ஆய்வு செய்துள்ளார் உதவிப் பேராசிரியை ஓல்கா. மொத்தம் 30,000 பெண்களிடம் இவர் ஆய்வு நடத்தியுள்ளார். இவர்கள் அனைவருமே ஒன்று முதல் 4 குழந்தைகள் வரை பெற்றவர்கள் ஆவர். இவர்களில் யாருமே கர்ப்ப காலத்திற்கு முன்பு இருந்த எடைக்கு மாறவே முடியவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்தது.
2 வருடத்திற்கு கூடவில்லை
இருப்பினும் குழந்தை பெற்று ஒன்று அல்லது 2 வருடம் வரை இவர்களின் எடையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அதன் பிறகுதான் எடை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அடடா, குழந்தையே பெறாமல் இருந்திருக்கிலாமோ என்று நினைக்கும் அளவுக்கு இவர்களுக்கு இந்த எடை அதிகரிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம்
குழந்தை பெற்றுக் கொள்ளாத பெண்களை விட குழந்தை பெற்றுக் கொண்ட பெண்களுக்குத்தான் எடை வேகமாக அதிகரிக்கிறதாம். வயது காரணமாக எடை அதிகரிப்பதும் இதில் சேருவதால் குழந்தைப் பேறு அடைந்த பெண்களின் எடை அதிகமாகவே போய் விடுகிறது. இந்த எடை அதிகரிப்புக்கு அப்பெண்களின் வாழ்க்கை முறைதான் காரணம் என்பது ஓல்காவின் தீர்ப்பு.
எடையில் அக்கறை காட்டுவதில்லை
"தாய்மார்கள் குழந்தை வளர்ப்பின்போது அவர்கள் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். தங்களது அழகு, எடை அதிகரிப்பு குறித்து அவர்கள் கருத்தில் கொள்வதில்லை. இது எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம்", என்று சொல்கிறார் ஓல்கா. "குழந்தைகள் மிச்சம் வைக்கும் சாப்பாட்டை, நொறுக்குத் தீனியை சாப்பிடுவது. அவர்களுடன் அமர்ந்து கதை பேசுவது, புத்தகம் படிப்பது, திரைப்படம் பார்ப்பது போன்றவற்றால் தாய்மார்களின் உடல் எடை அதிகரிக்க காரணமாகி விடுகிறது" என்று சொல்கிறார் ஓல்கா.
முன்கூட்டிய திட்டமிடல் முக்கியம்
கர்ப்பத்திற்கு திட்டமிடும்போதே உடல் எடை அதிகரிப்பை கட்டுக்குள் வைப்பது தொடர்பான முன்கூட்டிய திட்டமிடல்கள் மூலமாக இந்த உடல் எடை அதிகரிப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது ஓல்கா குழுவினரின் இறுதி வாதமாகும்.