காதல் இதயத்தை மட்டுமல்ல, கிட்னியையும் திருப்பிக் கொடு... கணவருக்கு நோட்டீஸ் அனுப்பிய மனைவி!
லண்டன்: தன் கணவரின் நடத்தையில் சந்தேகமடைந்த லண்டன் மனைவி ஒருவர், ஆத்திரத்தில் அவருக்குத் தான் தானமாக வழங்கிய சிறுநீரகத்தைத் திருப்பித் தரும்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
லண்டனைச் சேர்ந்த ஆண்டி லேம்ப் என்ற நபர், சிறுநீரகம் பழுதடைந்ததால், மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினால் மட்டுமே அவர் உயிர் பிழைப்பார் என்ற நிலையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவந்தார்.
அப்போது அவரது காதல் மனைவி சமந்தா, அவருக்கு தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கி மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட்டார். ஆனால், தற்போது அவர்களது குடும்ப உறவில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தானமாக கொடுத்த சிறுநீரகத்தை திருப்பிக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம் அந்தக் காதல் மனைவி.
வாழும் காதல் ஜோடி....
தனது சிறுநீரகத்தை அளித்து கணவரின் உயிரைக் காப்பாற்றிய சமந்தா மற்றும் அவரது கணவர் ஆண்டி பற்றி நிறைய ஆவணப்படங்கள் எடுக்கப் பட்டன. மீடியாக்களில் மிகவும் ஆசிர்வதிக்கப் பட்ட காதல் ஜோடியாக இத்தம்பதி கொண்டாடப் பட்டனர்.
நடத்தையில் சந்தேகம்...
இந்நிலையில் சமீபகாலமாக ஆண்டியின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட, அவர் தனது தோழியை காதலிக்கிறாரோ என சந்தேகமடைந்தார் சமந்தா. அதனைத் தொடர்ந்து ஆண்டி மற்றும் அவரது தோழியின் நடவடிக்கைகளை ஆராயத் தொடங்கினார் சமந்தா.
கணவரின் துரோகம்....
ஒருகட்டத்தில் சமந்தாவின் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது. தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக அளிக்கும் அளவிற்கு கணவரை நேசித்த சமந்தாவால் கணவரின் துரோகத்தை தாங்கிக் கொள்ள இயலவில்லை.
வக்கீல் நோட்டீஸ்....
அப்போது தான் அந்த அதிரடி முடிவை எடுத்தார் சமந்தா. ஆம், தான் தானமாகக் கொடுத்த சிறுநீரகத்தை திரும்பப் பெறுவது என முடிவு செய்தார். அதன்படி, தான் தானமாகக் கொடுத்த சிறுநீரகத்தை திருப்பித் தரும்படி, வக்கீல் நோட்டீஸ் ஒன்றை ஆண்டிக்கு அனுப்பியுள்ளார்.
மறுப்பு....
ஆனால், சமந்தாவின் குற்றச்சாட்டை மறுத்து வீட்டை விட்டு வெளியேறிய ஆண்டி, தான் சம்நதாவின் தோழியை காதலிக்கவில்லை என்றும், சமந்தாவின் வற்புறுத்தலால் தான் அவரது சிறுநீரகத்தை பெற்றுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.