பெஷாவரை விட பயங்கர தாக்குதல் நடத்துவோம்: மிரட்டும் தாலிபான் தலைவர்
இஸ்லாமாபாத்: பெஷாவரை விட மோசமான தாக்குதல் நடத்துவோம் என்று தாலிபான் தலைவர் மவுலானா பஸ்லுல்லா வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரீ் இ தாலிபான் தீவிரவாதிகள் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியை தாக்கியதில் 140 பேர் பலியாகினர். இந்நிலையில் தாலிபான் தலைவர் மவுலானா பஸ்லுல்லா பேசிய வீடியோ தெஹ்ரீக் இ தாலிபானின் மீடியாவான உமர் மீடியா மூலம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
12 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் பஸ்லுல்லா கூறியிருப்பதாவது,
பெஷாவர் பள்ளி மாணவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து சிறையில் உள்ள தாலிபான்களை ஒப்படைத்தால் அவர்களை திருப்பி அனுப்புவோம் என்று கூறலாம் என இருந்தோம். ஆனால் ராணுவம் தாக்கியதால் தான் மாணவர்களை கொலை செய்தோம். நாங்கள் கொன்றவர்கள் ராணுவத்தாரின் பிள்ளைகள். உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் வளர்ந்து ராணுவத்தில் சேர்ந்து எங்களுக்கு எதிராக போராடுவார்கள்.
சிறையில் இருக்கும் எங்கள் ஆட்களை துன்புறுத்துவதை நிறுத்தாவிட்டால் பெஷாவரை விட பயங்கர தாக்குதல் நடத்துவோம் என்று அரசை எச்சரிக்கிறேன். இது ராணுவத்திற்கும், எங்களுக்கும் இடையேயான போர். நீங்கள் எங்கள் ஆட்களை கொன்றால் நாங்கள் உங்கள் ஆட்களை கொலை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
பெஷார் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பஸ்லுல்லா கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தான் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ உண்மை எனில் பஸ்லுல்லா உயிரோடு தான் இருக்கிறார்.