பாக்தாதி மரணத்தோடு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அவ்வளவு தானா?
பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதி இறந்துவிட்டதாக ஈரான் ரேடியோ தெரிவித்துள்ளது. பாக்தாதியுடன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் அஸ்தமனமாகிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி இறந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் உண்மையிலேயே இறந்துவிட்டாரா இல்லை ஏமாற்று வேலையா என்று தெரியவில்லை. பாக்தாதி இறந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது இது ஒன்றும் முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூட பாக்தாதி இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
பாக்தாதி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்ததாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக இன்று ஈரான் ரேடியோ தெரிவித்துள்ளது. ஆனால் பாக்தாதி உயிருடன் நலமாக இருப்பதாக ஐஎஸ்ஐஎஸ் தெரிவித்துள்ளது. அவர் ஈராக்கில் உள்ள அன்பார் மாகாணத்தில் இருப்பதாக ஐஎஸ்ஐஎஸ் தெரிவித்துள்ளது.
பாக்தாதி
ஒரு காலத்தில் கால்பந்து வீரராக இருந்த பாக்தாதி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஆனார். பாக்தாதியின் மரணத்தோடு ஐஎஸ்ஐஎஸ் அஸ்தமனமாகிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ்
பாக்தாதி உண்மையாக இறந்திருந்தால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சரிவுக்கு அது வழிவகுக்கும். ஆனால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அஸ்தமனமாகிவிடாது. வேறு யாராவது ஒருவர் தலைவராகி அமைப்பை வழிநடத்துவார்.
பழி
பாக்தாதி இறந்திருந்தால் அவரது மரணத்திற்கு பழிவாங்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மேலும் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவார்கள். பாக்தாதி வெறும் தலைவர் மட்டும் அல்ல தன்னை தானே ஒரு கலிபா என்று அழைத்துக் கொண்டிருந்தவர். கலிபா என்பவர் நபிகளின் பிரதிநிதி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் நபிகளின் பிரதிநிதி என்று கூறிய பாக்தாதி இறந்திருந்தாலும் தீவிரவாதிகள் தங்கள் போரை தொடர்ந்து நடத்துவார்கள்.
தலைவர்
பாக்தாதி தன்னைப் பற்றி மட்டுமே நினைத்த தலைவர் அல்ல. தான் போரில் எப்பொழுது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்பதால் தனக்கு கீழ் பல தலைவர்களை நியமித்துள்ளார். அவர் இறந்தாலும் அந்த இடத்திற்கான ஆள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார். பாக்தாதி இறந்திருந்தால் அடுத்த தலைவராக அபு அலா ஆப்ரி என்ற முன்னாள் இயற்பியல் ஆசிரியர் பொறுப்பேற்பார்.
ஈரான்
பாக்தாதி இறந்துவிட்டதாக ஈரான் ரேடியோ தெரிவித்துள்ளது. பாக்தாதி இறக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த நாடு ஈரான். ஷியா, சன்னி முஸ்லிம்கள் இடையேயான பிரச்சனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பாக்தாதி தான் ஈரானின் பெரிய தலைவலி ஆகும். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரை அதிர வைக்க ஈரான் இந்த தகவலை அளித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.