சிக்காமல் விக்காமல் 444 சிக்கன் பீஸ்களை சாப்பிட்டு சாதனை படைத்த சிகாகோ பாட்ரிக்!
பிலடெல்பியா: அரை மணிநேரத்தில் 444 கோழிக் கறித்துண்டுகளை விழுங்கி சிகாகோவைச் சேர்ந்த பாட்ரிக் என்பவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ஆண்டுதோறும் அரை மணி நேரத்தில் அதிக கோழிக்கறி துண்டுகளை உண்ணும் போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி, 23வது ஆண்டாக இந்தாண்டுப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் கலந்து கொண்டனர். அதில், சிகாகோவைச் சேர்ந்த தொழில்முறை சாப்பாட்டு போட்டியாளரான பாட்ரிக் பெர்டோலெட்டி என்பவரும் ஒருவர்.
இவர் நிர்ணயிக்கப் பட்ட அரை மணி நேரத்தில் 444 கறித்துண்டுகளை விழுங்கி, போட்டியில் வெற்றி பெற்றார். கடைசி 2 நிமிடங்களில் மட்டும் இவர் 50 கறித் துண்டுகளை விழுங்கினார்.
தனது வெற்றி குறித்து பாட்ரிக் கூறுகையில், ‘போட்டி முடிந்த போது சாப்பிட்டே எனக்கு வியர்த்து விட்டது. எனினும் அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் அதற்கு மேல் ஒரு துண்டு கூட நான் உண்ண வேண்டாம் என எனக்கு தெரியும்' என்றார்.
இந்த வெற்றியின் மூலம் முந்தைய சாதனையை பாட்ரிக் முறியடித்துள்ளார். அரை மணி நேரத்தில் 440 கறித் துண்டுகளை சாப்பிட்டதே இதுவரை சாதனையாக இருந்தது. இந்த சாதனையை மொல்லி ஸ்குய்லர் என்பவர் படைத்திருந்தார்.
லெக் பீஸுக்கு சண்டை நடக்கும் நம்ம வீடுகளில்... பாட்ரிக் கொடுத்து வச்சவர் பாஸ்!