நாய் நக்கியதால் மூக்கு, கை, கால்களை இழந்த எஜமானி.. அமெரிக்காவில் பரிதாபம்!
நாய் நக்கியதால் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி எஜமானி ஒருவர் கை, கால்கள் மற்றும் மூக்கை இழந்துள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் தான் செல்லமாக வளர்த்த நாய் நக்கியதால், பாக்டீரியா தாக்குதலுக்கு ஆளாகி மூக்கு, கை மற்றும் கால்களை இழந்துள்ளார் எஜமானி ஒருவர்.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் முதலிடம் பிடிப்பது நாய்கள் தான். காரணம் வீட்டைக் காப்பது உள்பட மனிதர்களுக்கு பல விசயங்களில் இது உதவிகரமாக இருப்பது தான். ஆனால், வீட்டில் வளர்க்கப்படும் நாயாகவே இருந்தாலும், எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்பதை அமெரிக்காவில் நடந்த இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியை சேர்ந்தவர் க்ரெக் மண்டவுபெல் (48). இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். அவ்வப்போது நாயுடன் இவர் விளையாடுவது வழக்கம். அப்போது நாய் தன்னுடைய நாக்கால் அவருடைய உடல் பாகங்களை நக்கியுள்ளது. இதனை விளையாட்டாக எடுத்துக் கொண்டதால் அவர் கண்டுகொள்ளவில்லை.
புண்:
இந்நிலையில் திடீரென க்ரெக்க்கு கடும் காய்ச்சல், வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. தொடக்கத்தில் இதனை சாதாரணமாக அவர் எடுத்துக் கொண்டார். இதன் விளைவாக அவரது உடல் முழுவதும் ஆங்காங்கே புண் ஏற்பட்டுள்ளது.
நாய் மூலம் தாக்கு:
அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் க்ரெக். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் நாய் மூலம் பரவக்கூடிய பதோகென் என்ற பாக்டீரியா கலந்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
நோய் தடுப்புச் சக்தி
இந்த பாக்டீரியாக்கள் நாய் நக்கும் போதோ அல்லது கடிக்கும் போதோ எச்சில் வழியாக மனித ரத்தத்தில் கலக்கக்கூடியவை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்ட க்ரெக்கை இந்த பாக்டீரியா வேகமாக தாக்கியுள்ளது. பாக்டீரியாவை செயலிழக்க வைக்கும் நோய் தடுப்பு சக்தி அவருக்கு இல்லாமல் போனது முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.
தொடர் சிகிச்சை:
இந்த பாக்டீரியா தாக்குதலின் விளைவாக, அவரது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை அழுகியது. இதனால், அவை உடலில் இருந்து நீக்கப்பட்டன. பின்னர் மூக்கும் அழுகிப் போனதால், அது நீக்கப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு க்ரெக் சிகிச்சைப் பெற்று வருகிறார்.