அய்யா ஜாலி எங்க பாட்டியை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.. சந்தோஷத்தில் குதித்த பேத்தி!
லண்டன்: பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 93 வயது பாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றினார் அவரது பாசக்கார பேத்தி. அதுவும் பாட்டிக்கு ஷாக் கொடுக்கும் விதத்தில் ஆசையை நிறைவேற்றினார்.
பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ஜோஷி பேர்ட்ஸ் (93). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பேத்தி பாம் ஸ்மித்திடம் ஒரே ஒரு ஆசை மட்டும் நிறைவேறாமல் உள்ளது என கூறியுள்ளார்.
அப்படி என்ன பாட்டி உங்களுக்கு நிறைவேறாத ஆசை என ஸ்மித் கேட்டபோது, பாட்டி கூறுகையில் என் வாழ்வில் அனைத்து சுக துக்கங்களையும் கண்டு விட்டேன். எந்த குறையும் இல்லை. நல்ல அனுபவங்களும் எனக்கு கிடைத்தன.
சிறை அனுபவம்
ஆனால் என்னை ஒரு முறையாவது போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை என கூறினார். இதனால் ஸ்மித் அதிர்ந்து போனார். அதிலும் சிறை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை உணர ஆவலாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
வேண்டுகோள்
பாட்டி மீது ஸ்மித்துக்கு மிகுந்த பாசம் என்பதால் காவல் நிலையம் சென்று தனது பாட்டியை கைது செய்யுங்கள் என கூறினார். அதற்கு போலீஸாரோ எந்த தவறையும் செய்யாமல் யாரையும் கைது செய்ய முடியாது என்றனர். பின்னர் இது என் பாட்டியின் கடைசி ஆசை , அதை எப்படியாவது நிறைவேற்றுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சந்தோஷம்
இதையடுத்து பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவதாக தெரிவித்த போலீஸார், நேற்றைய தினம் பாட்டி ஜோஷியின் வீட்டுக்கு கைவிலங்குடன் வந்தனர். இதை பார்த்த பாட்டிக்கு ஒரே சந்தோஷம். இதனால் போலீஸாரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.
மகிழ்ச்சியில் துள்ளி குதித்த பேத்தி
தனது பாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றியமைக்கு நன்றி என ஸ்மித் தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியை தனது பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்துள்ளார். பாட்டி கைதானதை அடுத்து மகிழ்ச்சியில் பேத்தி துள்ளி குதித்த சம்பவம் பார்ப்போருக்கு அதிர்ச்சியையும் சிரிப்பையும் வரவழைத்தது. போலீஸார் பாட்டியை உட்காரவைத்து டீ, கேக் கொடுத்து விருந்தினரை போல் கவனித்து கொண்டனர்.