கழிவறையை கழுவும்போது மிஸ்ஸான வைரமோதிரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் சாக்கடையில் கிடைத்தது!
காணாமல் போய் 9 ஆண்டுகளுக்குப் பின் சாக்கடையில் வைரமோதிரம் மீட்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
நியூஜெர்சி: கழிவறையை சுத்தம் செய்யும் போது காணாமல் போன வைர மோதிரம், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப கிடைத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சி பகுதியைச் சேர்ந்தவர் பவுலா ஸ்டாண்டன் (60). 20வது திருமண நாளுக்கு, அவரது கணவர் மைக்கேல் வைர மோதிரம் ஒன்றைப் பரிசாக தந்துள்ளார். அதனை எப்போதும் கையில் அணிந்திருந்துள்ளார் பவுலா.
கடந்த 2009ம் ஆண்டு ஒருநாள் கழிவறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது மோதிரம் கழிவறையில் தவறி விழுந்தது. அம்மோதிரத்தை எடுக்க பவுலா எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அவை அனைத்தும் வீணாகின.
இதனால் சோகத்தில் இருந்த பவுலாவிற்கு, அவரது கணவர் அதே மாதிரி வேறு ஒரு வைர மோதிரத்தைப் பரிசாக அளித்தார்.
இந்நிலையில் உள்ளூர் பொதுப்பணித்துறை துறையினர் சமீபத்தில் பவுலா வீட்டிற்கு அருகே ஒரு சாக்கடையில் துப்புரவு வேலையில் ஈடுபட்டனர். அப்போது சாக்கடையில் இருந்து பவுலாவின் வைரமோதிரத்தை அவர்கள் கண்டெடுத்தனர். ஏற்கனவே இதுகுறித்து அவர்களிடம் பலமுறை பவுலா குடும்பத்தினர் புகார் தெரிவித்திருந்ததால், அவர்களிடமே அந்த மோதிரம் ஒப்படைக்கப்பட்டது.
தொலைந்த மோதிரம் 9 ஆண்டுகள் கழித்து தற்போது திரும்ப கிடைத்ததால் பவுலாவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.