இந்தியரை கடத்தி உயிரிழக்கச் செய்த அமெரிக்க பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை
நியூயார்க்: முன்னாள் லிவ் இன் பார்ட்னரான இந்தியரை கடத்தி அவரது மரணத்திற்குக் காரணமான அமெரிக்க பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டிரினட் பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவழியினர், பல்ராம் பலோ மகாராஜ். டோரீன் என்ற பெண்ணுடன் இவர் லிவ் இன் பார்ட்னராக சில காலம் குடும்பம் நடத்தினார். அவருக்கு பிறந்த குழந்தைகளில் ஒன்றுக்கு பல்ராம் பலோ மகாராஜ் தந்தையானார்.
சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இருவரும் பிரிந்தனர். இந்த பிரிவிக்கு பின்னர், அலெக்சாண்டர் என்பவரை திருமணம் செய்து கொண்ட டோரீன், பல்ராம் பலோ மகாராஜை பழி வாங்க நினைத்தார்.
பணக்காரரான அவரை புதிய கணவர் அலெக்சாண்டரை வைத்து கடத்திவந்து பணம் பறிக்க அவர் திட்டமிட்டார். அதன்படி, 2005-ம் ஆண்டு அடியாட்களை ஏவி பல்ராம் பலோ மகாராஜை கடத்திவந்து அடைத்து வைத்தார். அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ஒரு பெருந்தொகையை தங்களுக்கு வழங்க வேண்டும் என டோரீனும் அவரது கணவர் அலெக்சாண்டரும் பல்ராம் பலோ மகாராஜின் குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தனர்.
அவரை மீட்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அடைத்து வைக்கப்பட்டிருந்த பல்ராம் பலோ மகாராஜ் இயற்கையாக மரணம் அடைந்தார்.
அவரது மரணத்துக்கு டோரீன் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளி டோரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார். அவருக்கு உடந்தையாக இருந்த கணவர் அலெக்சாண்டருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.