இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா: அமெரிக்காவில் வினோதம்
நியூஜெர்சி: அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு தந்தைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்தவர் டி.எம். என்ற பெண். அவர் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் இரட்டைப் பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அதன் பிறகு அவரது காதலர் அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து டி.எம். தனக்கும், குழந்தைகளுக்கும் பிரிந்து சென்ற காதலர் ஜீவனாம்சம் வழங்கக் கோரி பசைக் கவுன்ட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு நீதிபதி சொஹைல் முகமது முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தைகளின் மரபணுவை சோதிக்க நீதிபதி உத்தரவிட்டார். மரபணு சோதனையில் ஒரு குழந்தைக்கு டி.எம்.மின் காதலர் தந்தை என்பது தெரிய வந்தது. மற்றொரு குழந்தை வேறொரு நபருக்கு பிறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அந்த பெண்ணிடம் கேட்டதற்கு காதலருடன் உறவு கொண்ட மறு வாரத்தில் வேறு ஒருவருடனும் உறவு கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இரண்டாவதாக உறவு கொண்ட நபர் யார் என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். இதை கேட்ட நீதிபதி சொஹைல் டி.எம்.மின் முன்னாள் காதலர் அவருக்கு பிறந்த குழந்தைக்கு மட்டும் வாரத்திற்கு ரூ.2,000 பராமரிப்பு தொகை அளித்தால் போதும் என்று கூறி தீர்ப்பளித்தார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,
விந்தணுக்கள் 5 நாட்கள் வரை உயிரோட்டத்துடன் இருக்கும். அதனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் உறவு கொண்டுவிட்டு அடுத்த வாரத்தில் வேறு ஒரு ஆணுடன் உறவு கொண்டால் 2 பேரின் விந்தணுக்கள் 2 கருமுட்டைகளுடன் சேர்ந்து இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளது. இது போன்று 10 லட்சத்தில் ஒருவருக்கு நடக்கும் என்றனர்.