வியட்நாம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள்... ஆனால், வேறு வேறு அப்பா!
ஹனோய்: வியட்நாம் பெண் ஒருவர் வெவ்வேறு ஆண்கள் மூலம் ஒரே நேரத்தில் கருத்தரித்து, இரட்டை குழந்தைகளுக்கு தாய் ஆன சம்பவம் மருத்துவ உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமில் உள்ள ஹனோய் நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. சில மணி நேர இடைவெளியில் பிறந்த இந்தக் குழந்தைகள் வளர வளர உடல் மற்றும் முக அமைப்புகள் வித்தியாசமாக இருந்தன.
ஒரு குழந்தைக்கு அடர்த்தியாக தலைமுடியும், மற்றொரு குழந்தைக்கு லேசான தலைமுடியும் என இரண்டு குழந்தைகளுக்கும் இடையே இமாலய வித்தியாசம். இதனால், அக்குழந்தைகளின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஒருவேளை பிரசவத்தின் போது குழந்தைகள் மாறி இருக்கலாம் என அவர்கள் சந்தேகித்தனர். இதனால், தற்போது இரண்டு வயதாகும் அக்குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த அவர்கள் முடிவெடுத்தனர்.
சோதனையின் முடிவில் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் அப்பெண்ணின் கணவருக்கு பிறந்தது என்பது உறுதியானது. இதனால், மற்றொரு குழந்தை வேறு ஒரு ஆணுக்கும், அப்பெண்ணிற்கும் பிறந்தது என்ற அதிர்ச்சித் தகவல் அம்பலமானது. .
சம்பந்தப்பட்ட அந்த இரட்டை குழந்தைகளின் தாயார் தனது கணவருடனும், வேறொரு சமயத்தில் கணவருக்கு தெரியாமல் மற்றொரு நபருடனும் உறவு கொண்டுள்ளார். இதில், அவர் கர்ப்பமடைந்தார். அவருக்கு இரட்டைக் குழந்தை உருவாகியுள்ளது. இரண்டுமே இரு ஆண்களால் உருவானவை.
இதுதான் இரட்டைக் குழந்தையாக பிறந்தாலும், அது இரு வேறு ஆண்களின் குழந்தையாக மாறி வந்து விட்டது.
இத்தகைய சம்பவங்கள் உலகில் மிக மிக அபூர்வமாக நடைபெறக் கூடியது என மருத்துவ நிபுணர்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.