ஏமாற்றிய காதலனைக் கொன்று இதயத்தை வெளியில் எடுத்த காதலி... தூக்குதண்டனை விதித்த கோர்ட்!
டாக்கா: காதலித்து ஏமாற்றிய காதலனை கொலை செய்து இதயத்தை வெட்டி எடுத்த காதலிக்கு வங்காள தேச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
வங்காள தேசத்தை சேர்ந்தவர் பாத்திமா அக்தர் சோனாலி என்ற இளம்பெண். இவரும், ஷிபான் என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். காதலர்கள் இருவரும் பல இடங்களுக்கு ஜோடியாக சுற்றித் திரிந்தனர். ஏறக்குறைய திருமணம் செய்யாமலேயே கணவன், மனைவியாக இருவரும் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், திடீரென ஷிபானின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. சோனாலியைத் திருமணம் செய்ய அவர் மறுப்புத் தெரிவித்தார்.
அதோடு, தங்கள் இருவருக்கும் இடையேயான அந்தரங்க உறவை ரகசியமாக ஷிபான் அவரது லேப்டாப்பில் பதிவு செய்து இருந்தார். இது போன்று பல பெண்களுடன் வைத்திருந்த உறவும் அதில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த சோனாலி ஆத்திரமடைந்தார்.
தன்னைக் காதலித்து ஏமாற்றிய ஷிபானை அவர் பழி வாங்கத் திட்டமிட்டார். அதன்படி, குளிர்பானத்தில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து ஷிபானை மயங்க வைத்தார். பின்னர் அவரை வெட்டிக் கொலை செய்த சோனாலி, ஷிபானின் இதயத்தை கத்தியால் வெட்டி வெளியே எடுத்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சோனாலியைக் கைது செய்தனர். இந்த வழக்கு குல்னா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் போது, ‘ஷிபானுக்கு பெரிய இதயம் இருக்க வேண்டும் என கருதியதாக தெரிவித்த சோனாலி, அதன் அளவை பார்க்கவே வெளியே எடுத்ததாக' தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, காதலரைக் கொடூரமாகக் கொன்ற சோனாலிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
வங்கதேசத்தில் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் பெண் குற்றவாளி சோனாலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.