விலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி புலி இருக்கும் பகுதிக்குள் குதித்த பெண்: ஏன் தெரியுமா?
டொரண்டோ: கனடாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் பெண் ஒருவர் வேலியில் ஏறி புலி இருக்கும் இடத்தில் குதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் டொரண்டோ நகரில் இருக்கும் விலங்கியல் பூங்காவுக்கு பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அவரின் தொப்பி ஹரி எனப்படும் புலியை அடைத்து வைத்திருந்த பகுதியில் பறந்து விழுந்தது.
இதை பார்த்த அந்த பெண் வேலியில் ஏறிக் குதித்து புலி இருக்கும் பகுதியில் கிடந்த தனது தொப்பியை எடுத்தார். இதை பார்த்த புலி பாய்ந்து வந்தது. ஆனால் புலிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே இரண்டு வேலிகள் அமைக்கப்பட்டிருந்ததால் அதனால் அந்த பெண்ணை நெருங்க முடியவில்லை.
அந்த பெண் முதல் வேலியில் ஏறி குதித்ததால் இரண்டாம் வேலிக்குள் இருந்த புலியிடம் சிக்காமல் தப்பித்தார். அவரின் செயலை பார்த்த பிற பார்வையாளர்கள் பதறிப்போய் அவரை திட்டினர்.
ஒரு தொப்பிக்காக அந்த பெண் செய்த செயலை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.