போட்டோஷாப் போட்டோவால் விவசாயி மகளுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீங்களா?
நைரோபி: போட்டோஷாப் செய்து ஃபேஸ்புக்கில் புகைப்படங்களை வெளியிட்ட கென்யாவை சேர்ந்த பெண்ணிற்கு அடித்துள்ள அதிர்ஷ்டத்தை பார்த்து பலரும் வியக்கின்றனர்.
கென்யாவை சேர்ந்த பெண் சீவ்லின் கேட்ஸ். அவருக்கு சீனாவை சுற்றிப் பார்க்க ஆசை இருந்தது. விவசாயியின் மகளான அவருக்கு சீனாவுக்கு செல்லும் அளவுக்கு வசதி இல்லை. இந்நிலையில் அவர் தனது நண்பரிடம் கூறி தனது புகைப்படங்களை தான் சீனாவில் இருப்பது போன்று போட்டோஷாப் செய்து அவற்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.
யாருப்பா இப்படி கேவலமாக போட்டோஷாப் செய்தது என்று மக்கள் அவரை கிண்டல் செய்தனர்.
சீனா
நான் கென்யாவில் இருந்து சீனாவுக்கு கிளம்பிவிட்டேன் என்று கூறி சீவ்லின் கென்யா ஏர்வேஸ் விமானத்திற்கு அருகில் நிற்பது போன்ற போட்டோஷாப் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.
சீன பெருஞ்சுவர்
சீனாவில் உள்ள பெருஞ்சுவரில் நிற்பது போன்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்டு என்ஜாய் செய்வதாக தெரிவித்துள்ளார் சீவ்லின். நேரில் செல்ல முடியாததால் தனது ஆசையை இப்படி தீர்த்துக் கொண்டுள்ளார்.
குட்பை சீனா
சீனாவில் சில சுற்றுலாப்பயணிகளுடன் சேர்ந்து நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சுற்றுலாவின் கடைசி நாள் குட்பை சீனா என்று ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் சீவ்லின்.
அதிர்ஷ்டம்
மோசமான போட்டோஷாப்பிற்காக பலரும் சீவ்லினை கிண்டல் செய்ய அவரது புகைப்படங்களை பார்த்த தொழில் அதிபர் சாம் கிசுரு வேறு விதமாக யோசித்தார். இதையடுத்து அவர் சீவ்லின் சீனா சென்று வருவதற்கான செலவு மற்றும் அவரது கைச் செலவிற்கும் பணம் அளித்துள்ளார். இதற்கு சீவ்லின் சாமிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.