பஸ்ஸுக்காக காத்திருந்த இளம்பெண் பலாத்காரம்... கடந்து சென்ற கார்கள்... இது இங்கிலாந்தில்!
லண்டன்: பேருந்துக்காகக் காத்திருந்த 18 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இச்சம்பவம், ‘இந்தியாவின் மகள்' என்ற பெயரில் ஆவணப்படமாக எடுக்கப் பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப இந்தியா தடை செய்துள்ள நிலையில், மற்ற நாடுகளில் அது ஒளிபரப்பப் பட்டுள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறி தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கிலாந்தில் ஒரு பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தின் லீட்ஸ் சிட்டி சென்டரில் உள்ள பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக நேற்றிரவு 18 வயதுப் பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் அந்தப் பெண்ணை அருகில் இருந்த புதருக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சம்பவம் நடந்த அந்த பேருந்து நிறுத்தம் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரின் மையப்பகுதி. எனவே, நிச்சயமாக அந்த சாலை வழியாக கடந்து சென்ற வாகனங்களில் பயணித்தவர்களுக்கு பலாத்கார சம்பவம் நடந்தது நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனபோதும், அவர்கள் யாரும் அதைத் தட்டிக் கேட்க முன்வரவில்லை என அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
பின்னர் அப்பகுதியில் சென்ற வழிப்போக்கர் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மயக்க நிலையில் கிடந்த பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், இடுப்பு எலும்பு முறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிறுத்தத்தில் கிடைத்த தடயங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.