16 கேப்சூல்களில் அடைத்து வயிற்றில் ரூ. 45 லட்சம் கடத்திய பெண் கைது
புந்தாகானா, ஆப்பிரிக்கா: ஆப்பிரிக்காவில் 70 ஆயிரம் அமெரிக்க டாலரை கேப்சூலின் அடைத்து வயிற்றில் வைத்து கடத்திய பெண்ணை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆப்பிரிக்காவின் டொமினிகன் குடியரசு நாட்டில் போதை பொருள் கடத்தலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி அங்குள்ள விமான நிலையங்களில் போதை பொருள் தடுப்பு படையினர் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள சுற்றுலா மையமான புந்தாகானா விமான நிலையத்தில் சந்தேகப் படும் வகையில் இருந்த பெண் பயணியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரை ஸ்கேன் செய்து பார்த்தனர்.
அப்போது அப்பெண்ணின் வயிற்றுக்குள் 70 ஆயிரம் அமெரிக்க டாலர் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவற்றை 16 கேப்சூல்களில் அடைத்து அவர் விழுங்கி மறைத்து எடுத்து வந்துள்ளார். அதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 45 லட்சம் ஆகும். இது தவிர அப்பெண்ணின் சூட்கேசில் மறைத்து வைக்கப் பட்டிருந்த ரூ. 43 லட்சம் பணமும் கைப்பற்றப் பட்டது.
உடனடியாக அப்பெண்ணை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதற்கு முன்னர் தங்கம், போதைப் பொருள் போன்றவற்றை இவ்வாறு கடத்தியவர்களைக் கைது செய்துள்ளதாகவும், ஆனால் முதன்முறையாக இப்போது தான் பணத்தை இம்முறையில் கடத்திய நபரைக் கைது செய்துள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் வியப்புடன் தெரிவித்துள்ளனர்.
வயிற்றுக்குள் வைத்து நூதன முறையில் பணம் கடத்திய பெண்ணின் பெயரை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.