சவுதி அரேபியாவில் இனி பெண்களும் கார் ஓட்டலாம்.. அனுமதி வழங்கினார் மன்னர் சல்மான்!
சவுதி அரேபியாவில் பெண்கள் இனி கார் ஓட்டுவதற்கான அனுமதியை மன்னர் சல்மான் வழங்கியுள்ளார்.
ரியாத்: சவுதி அரேபியாவில் பெண்கள் இனி கார் ஓட்டுவதற்கான அனுமதியை மன்னர் சல்மான் வழங்கியுள்ளார்.
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. உலகிலேயே பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்காமல் இருந்த ஒரே நாடு சவுதி அரேபியா.
இதனை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. தடையை மீறி வாகனம் ஓட்டிய பெண்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
பெண்கள் கார் ஓட்டலாம்
இந்நிலையில் நேற்றிரவு சவுதி மன்னர் சல்மான் பெண்கள் இனி வாகனங்கள் ஓட்டலாம் என அனுமதி வழங்கினார். பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வழங்கவும் அவர் ஆணை பிறப்பித்தார்.
30 நாள் அவகாசம்
அந்த ஆணையைச் செயல்படுத்துவதற்கான அறிக்கைகளைத் தயாரிக்கவும் இந்த உத்தரவை நடைமுறைபடுத்தவும் அதிகாரிகளுக்கு 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் வாகனங்கள் ஓட்டும்போது பாதுகாவலர் தேவையில்லை என்றும் மன்னரின் உத்தரவில் தெரிவித்தக்கப்பட்டுள்ளது.
சவுதி பெண்கள் மகிழ்ச்சி
மேலும் லைசென்ஸ் பெறவும் பெண்களுக்கு சட்ட பாதுகாவலர் தேவையில்லை என்றும் மன்னர் தெரிவித்துள்ளார். மன்னரின் இந்த அனுமதியால் சவுதி பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உலக நாடுகள் வரவேற்பு
மதகுருமார்களை சம்மதிக்க வைத்து மன்னர் சல்மான் அடிப்படைவாத ராஜ்ஜியத்தில் இந்த சீர்த்திருத்ததை மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் சவுதி அரேபிய மன்னரின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.