நாய்க்கடியில் துண்டான காது... அட்டைப் பூச்சிகளின் உதவியோடு மீண்டும் ஒட்ட வைத்து மருத்துவர்கள் சாதனை
வாஷிங்டன்: நாய்க்கடியால் காதிழந்த இளம்பெண் ஒருவருக்கு ரத்தத்தை உரிஞ்சும் அட்டைப் பூச்சிகளின் உதவியோடு மீண்டும் காதை ஒட்டவைக்கும் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர் மருத்துவர்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் எதிர்பாராதவிதமாக வெறிநாய்க் கடித் தாக்குதலில் சிக்கினார். அதில் அவரது காது ஒன்று துண்டானது, தோளிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக துண்டான காதுடன் மருத்துவமனை விரைந்த அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சை அளித்தனர்.
ஆனபோதும், காதை மீண்டும் ஒட்ட வைக்க முடியவில்லை. காரணம் காதிலிருந்து உடலோடு இணைய வேண்டிய சில நுண்ணிய ரத்தக் குழாய்கள் சிதைந்திருந்தன.
தீவிர ஆலோசனைக்குப் பிறகு அட்டைப் பூச்சிகளின் உதவியோடு காதை மீண்டும் ஒட்டவைக்கலாம் என மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகள் சிலவற்றை செயற்கையாக காதுகளில் ஒட்ட வைத்து அவற்றின் மூலம் உடம்பிலிருந்து ரத்தத்தை உறிஞ்சும் வண்ணம் அறுவை சிகிச்சை செய்தனர். இந்த அமைப்பு தற்காலிகமானது தான் எனத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், விரைவில் உண்மையான ரத்த குழாய்கள் உருவாகி விடும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இதில் மற்றொரு முக்கியமான விசயம் என்னவென்றால் விபத்தில் காது துண்டான போது, அப்பெண்ணின் காதில் தோடு இருந்ததாம். அதனை அகற்றாமலே மீண்டும் காடை ஒட்ட வைத்துள்ளனர் மருத்துவர்கள்.
இத்தகவல் அமெரிக்க மருத்துவ நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.