இதெல்லாம் ரொம்ப ஓவர்ம்மா... கணவரின் மீசை பிடிக்கலையாம்.. டைவர்ஸ் கேட்கும் பெண்
அல்ஜீயர்ஸ்: கணவரின் மீசை பிடிக்காததால் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் அல்ஜீரியா பெண் ஒருவர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியா நீதிமன்றத்தில் தான் இந்த வினோத வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
வழக்குத் தொடுத்த பெண்ணிற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின்னர் மீசையை எடுத்து விடுவதாக கணவர் அளித்த வாக்குறுதியை நம்பியே திருமணத்திற்கு சம்மதித்துள்ளார் அப்பெண்.
ஆனால், திருமணம் முடிந்து மூன்று மாதங்களாகியும் அவர் மீசையை எடுக்கவில்லை. இது தொடர்பாக அப்பெண் கேட்டபோது, மீசையை எடுக்க இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏமாற்றமடைந்த அப்பெண், இந்த விவகாரத்தில் நீதிமன்ற உதவியை நாடியுள்ளார். இதுதொடர்பாக தலைநகர் அல்ஜீயர்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதியின் முன்னிலையில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போது, ‘பயமுறுத்தும் அவரது மீசையை சகித்துக்கொண்டு என்னால் அவருடன் வாழவே முடியாது. எனவே, அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து பெற்றுத் தாருங்கள்' என நீதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.