மீதமிருந்த பீரை குடித்த கணவர்... ஆத்திரத்தில் கத்தரியால் கணவரின் கழுத்தை அறுத்த மனைவி
ஹாரீஸ்பெர்க்: பென்சில்வேனியாவில் தான் மீதம் வைத்த பீரைக் குடித்த கணவரை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் ட்ரேசி லீ கிஃபின் என்ற பெண். இவர் கடந்த ஞாயிறு இரவு தன் கணவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது தனக்குப் பிடித்தமான பீரை சிறிது மீதம் வைத்து விட்டு தூங்கப் போய் விட்டார்.
மறுநாள் காலை உறக்கத்திலிருந்து விழித்த அவர், தான் குடிப்பதற்காக மீதம் வைத்திருந்த பீரை தேடியுள்ளார். அப்போது அதை தன் கணவர் குடித்து தீர்த்து விட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கோபத்தில் அருகில் இருந்த கத்திரிக்கோலால் உறங்கிக் கொண்டிருந்த கணவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில், கழுத்திலும், தலையிலும் பலத்த காயமடைந்த கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ட்ரேசியைக் கைது செய்தனர். அவர் மீதான வழக்கின் முதல் விசாரணை ஆகஸ்ட 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.