"சன்"னில் உள்ள எனது மனையை விற்றுத் தர மறுப்பதா... "ஈ-பே' மீது வழக்கு போட்ட பெண்!
மேட்ரிடில்: சூரியனில் உள்ள தனது மனைகளை விற்றுத் தர மறுப்பதாக ஈ-பே நிறுவனத்தின் மீது ஸ்பெயின் நாட்டுப் பெண் ஒருவர் வழக்குத் தொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
செவ்வாயில் மனிதனைக் குடியேற்றுவது குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், சூரியனில் குடியேறுவது குறித்து கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. காரணம் அது ஒரு நெருப்புப் பந்து. பக்கத்தில் போனாலேயே பொசுங்கிப் போயிருவோம்.
ஆனால், அந்தச் சூரியனில் ஒரு பகுதி தனக்குச் சொந்தமானது என கடந்த 2010ம் ஆண்டிலிருந்து கூறி வருகிறார் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா துரான் (54) என்ற பெண். மேலும், தன்னிடம் அனுமதி பெறாமல் சூரியனில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப் போவதாக பல முறை அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
சூரியனில் மனை...
இந்நிலையில், தற்போது ஈ-பே இணையதளம் மீது புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதாவது, ஈ-பே இணையதளம் வாயிலாக தனது சூரிய மனைகளை விற்பனை செய்து வந்தார் மரியா. ஆனால், அதற்கு ஈ-பே தடை விதித்து விட்டது.
வழக்கு...
அதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் உலகின் முன்னணி இணைய விற்பனை தளமான "ஈ-பே' மீது மரியா துரான் வழக்கு தொடந்துள்ளார்.
பத்திரப்பதிவு...
ஈ-பே' வலைதளத்தில் தனது "சூரிய' மனைகளை நீண்ட காலம் விற்பனை செய்து வந்த மரியா துரான், முன்னதாகவே ஸ்பெயின் நாட்டு ஆவணப் பதிவு அலுவலகம் ஒன்றில் சூரியனின் ஒரு பகுதியை தனது பெயரில் பதிவு செய்து கொண்டுள்ளார்.
சூடான விற்பனை...
அந்தப் பகுதியைத் தான் மனைகளாகப் பிரித்து, சதுர மீட்டர் ஒரு யூரோ (சுமார் ரூ.72) என்ற விலைக்கு அவர் விற்று வந்துள்ளார். மரியாவின் இந்த சூடான விற்பனை இரண்டு ஆண்டுகள் கழித்துத் தான் ஈ-பேயின் கவனத்திற்கு வந்துள்ளது.
தடை விதித்த ஈ-பே...
தனது நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப் படுவதை உணர்ந்த ஈ-பே நிறுவனம், விற்பனை விதிமுறைகளை மீறியதாகக் கூறி மரியாவின் சூரிய விற்பனைக்கு தடை விதித்தது.
நஷ்டஈடு...
இந்தத் தடைக்கு எதிராகத் தான் மரியா வழக்குத் தொடர்ந்துள்ளார். இணையம் மூலம் சூரியனில் தான் விற்பனை செய்த மனைகளுக்கான 7,500 பவுண்டுகளை (சுமார் ரூ.7.3 லட்சம்) "ஈ-பே'-விடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என அந்த மனுவில் மரியா துரான் கேட்டுள்ளார்.
சமரசப் பேச்சு...
இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது. இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்ளலாம் என "ஈ-பே' நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாகவும், ஆனால் அதற்கு மரியா ஒப்புக் கொள்ளவில்லை என்றும் பிரிட்டனைச் சேர்ந்த "ஸ்கை நியூஸ்' ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
ஐநா தீர்மானம்...
‘பிற கிரகங்களையும், நட்சத்திரங்களையும் உரிமை கொண்டாடக் கூடாது' என ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக மரியாவிடம் கேட்கப் பட்டதற்கு, "அந்த தீர்மானம் உலக நாட்டு அரசுகளுக்குதான் பொருந்தும். என்னைப் போன்ற தனி நபர்களை அந்தத் தீர்மானம் கட்டுப்படுத்தாது' என கூலாக பதிலளிக்கிறார்.