மகனுக்காக வாடகைத் தாயாக மாறி ‘பேரனை’ப் பெற்றெடுத்த பாட்டி... இங்கிலாந்தில்!
லண்டன்: மகனின் குழந்தை ஆசையை நிறைவேற்ற வாடகைத்தாயாக மாறி, தானே ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளார் இங்கிலாந்தில் வாழும் தாய் ஒருவர்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கைல் செசான்(27).குழந்தைகள் என்றால் கொண்டாடும் கைல், ஒரு கே என்பதால் அவரால் நேரடியாக ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாத நிலை. இதனால் பெரும் கவலையடைந்தார் கைல்.
தொடக்கத்தில் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என்று நினைத்த கைலுக்கு செயற்கை கருத்தரிப்பைப் பற்றி தெரிய வந்தது. உடனே ஒரு செயற்கை கருத்தரிப்பு மையத்தை தொடர்பு கொண்ட கைல், தன்னார்வலரிடமிருந்து கருமுட்டையை பெற்று கைலின் விந்தணுவுடன் அதை உருமாற்றி வாடகைத்தாயின் கருப்பையில் வைத்து குழந்தை பெறும் முறையை அறிந்தார். ஆனால், தனக்கான குழந்தையைப் பெற்றெடுக்க யார் சம்மதிப்பார்கள் என்ற குழப்பம் அவருக்கு.
கைலின் உறவுக்காரப் பெண்களும், அவருக்கு வாடகைத் தாயாக இருக்க மறுத்து விட்டனர். இதனால் பெரும் கவலையடைந்தார் கைல். இனி, தன் ஆசை நிறைவேற வாய்ப்பில்லை என நினைத்த கைலுக்கு, உதவ முன் வந்தார் அவரது அம்மா.
தன் மகனின் குழந்தை ஆசையை நன்கு அறிந்த அம்மா மேரி, தன் கணவரின் சம்மத்தோடு மகனுக்கு வாடகைத் தாய் ஆனார். தன் மகனைச் சுமந்த கருப்பையிலேயே, அவனது மகனையும் சுமந்தார். நல்லபடியாக பெற்றும் கொடுத்தார்.
தன் குழந்தைக்கு மைல்ஸ் என்று பெயர் வைத்த கைல், தனது குழந்தை ஆசைக்காக ரூ. 15 லட்சம் செலவு செய்ததோடு, சட்ட ரீதியாகவும் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்.
இது குறித்து கைல் கூறுகையில் "நான் செய்த காரியத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதென்று எனக்கு புரிகிறது. நான் ஆசைப்பட்டு கேயாக இருக்கவில்லை. நான் கேயாகத்தான் பிறந்தேன். பாலினத்தை வைத்து நான் தந்தையாவதை இந்த சமூகம் தடுக்க முடியுமென்று நான் நம்பவில்லை. எனக்கு ஒரு வீடு இருக்கிறது. அதேபோல் எனக்கென்று ஒரு உறவு வேண்டும். நான் பொதுமக்கள் வரிப்பணத்தில் ஒன்றும் இதைச் செய்யவில்லை. சூப்பர் மார்க்கெட்டில் கஷ்டப்பட்டு வேலை செய்து கிடைத்த பணத்தில்தான் இதை செய்கிறேன். இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை என்று எனக்குப் புரியவில்லை." என வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் தனி ஆளாக வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற முதல் ஆண் கைல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.