புர்கா அணிந்தால் ரூ.6.5 லட்சம் அபராதம்: சுவிட்சர்லாந்தில் புதிய சட்டம்
ஜுரிச்: சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாநிலத்தில் முகத்தை மறைக்கும்படி புர்கா அணியும் பெண்களுக்கு ரூ.6 லட்சத்து 53 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் மக்கள் வசிக்கும் டிசினோ மாநிலத்தில் பெண்கள் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிந்து கடைகள், உணவகங்கள், அரசு கட்டிடங்கள் என்று வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி புர்கா அணிந்து வரும் பெண்களுக்கு ரூ.6 லட்சத்து 53 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கான சட்டத்திற்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும் புர்காவுக்கு எதிராக தான் அவர்கள் வாக்களித்துள்ளனர். டிசினோவுக்கு சுற்றுலா செல்லும் முஸ்லீம் பெண்களும் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிசினோவில் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிவது சட்டவிரோதமானது என்று சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்கள் மற்றும் நாட்டின் எல்லையில் சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.
முன்னதாக புர்காவுக்கு தடை விதித்து 2010ம் ஆண்டு பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. மேற்கு ஐரோப்பாவிலேயே பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.