நீர் சூழ் சொர்க்கம்.. மனதை மயக்கும் மகளிர் மட்டும் தீவு!
பின்லாந்து நாட்டில் பெண்களுக்காக மட்டும் பிரத்யேகமான ஒரு தீவு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்.
ஹெல்சிங்கி: பின்லாந்து நாட்டில் ஒரு தனியாருக்குச் சொந்தமான தீவு பெண்களைக் கவர்ந்திழுக்கிறது. காரணம், இந்தத் தீவில் பெண்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கான பிரத்யேக தீவு இது.
SuperShe Island என்று இந்தத் தீவுக்குப் பெயர். மிக மிக பாதுகாப்பான சூழலில், நீர் சூழ் தனி உலகாக இது காட்சி தருகிறது. இங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை என்பதால் பாதுகாப்பு 100 சதவீதம் உத்தரவாதமாக உள்ளது.
இங்கு பெண்கள் உற்சாகமாக வலம் வரலாம். யோகாசனம் சொல்லித் தருகிறார்கள். தியானம் செய்யலாம். அங்குள்ள பண்ணையில் விளையும் காய்கறிகளைக் கொண்டு உணவு சமைத்துத் தருகிறார்கள். மிகவும் ஆரோக்கியமாகவும், அக மகிழ்வோடும் இங்கு நாம் ஓய்வெடுக்க வழி வகைகள் உள்ளன.
பூலோக சொர்க்கம்
பின்லாந்து நாட்டில் பால்டிக் கடலில் இந்தத் தீவு அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் ரம்மியமான சூழல் இது. கிட்டத்தட்ட பூலோக சொர்க்கம் என்பார்களே அதுபோலத்தான் இதுவும். வரும் கோடை காலத்தில் இது பொதுமக்களுக்காக திறந்து விடப்படவுள்ளது.
ஒரே இடத்தில் உலகப் பெண்கள்
இந்தத் தீவை நிர்வகித்து வருபவர் அங்குள்ள சிறு தொழிலதிபர் கிறிஸ்டினா ரோத் என்பவர் ஆவார். இவர்தான் இந்தத் தீவை இப்படி பயன்படுத்தும் விதையை ஊன்றியவர். "உலகெங்கும் உள்ள பெண்களை ஒரே குடையில் இந்த இடத்தில் இணைப்பதுதான் எனது நோக்கம்" என்று புன்முறுல் பூக்கிறார் கிறிஸ்டினா.
திருப்தியுடன் திரும்புங்கள்
"சத்தான உணவு, ஆரோக்கியமான விவாதங்கள், ஜாலி விளையாட்டுகள், மனதை ரிலாக்ஸாக்கும் யோகா உள்ளிட்டவை. இதுதான் இந்தத் தீவின் பலம்" என்று கூறி தீவின் நோக்கம் குறித்து விளக்குகிறார் கிறிஸ்டினா. இங்கு வந்து செல்வோர் புதிய உணர்வுடன், புதிய தெம்புடன், 100 சதவீத திருப்தியுடன் திரும்பிச் செல்வார்கள் என்றும் நம்பிக்கையோடு பேசுகிறார் கிறிஸ்டினா.
ஆண்களால் நோக்கம் மாறி விடும்
இங்கு ஆண்கள் அனுமதிக்கப்படாததற்கு என்ன காரணம் என்பதையும் விளக்குகிறார் கிறிஸ்டினா. "எனக்கு ஆண்களைப் பிடிக்கும். நான் வெறுக்க மாட்டேன். அதேசமயம், இந்த தீவானது பெண்களுக்கு மட்டுமானது. இது பெண்களின் உலகமாக விளங்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆண் - பெண் உறவு என்பதை விடவும், மன உற்சாகமும், மன வலிமையை அதிகரிப்பதுமே எனது நோக்கமாகும். ஆண்களையும் அனுமதித்தால் அது வேறு பாதைகளுக்குத் திரும்பி விடும். எனவேதான் இந்தத் தீவை பெண்களுக்கான தீவாக மாற்றியுள்ளேன்" என்று சொல்கிறார் கிறிஸ்டினா.
அதிகரிக்கும் ஆர்வம்
இந்தத் தீவில் அனைத்து வசதிகளும் உள்ளன. போட்டிங் வசதியும் உண்டு. ஒருவர் ஐந்து நாள் தங்குவதாக இருந்தால் அவருக்கான கட்டணம் அதிகபட்சம் 6000 டாலர் வரை வரும். வரும் ஜூன் மாதம் இது பயன்பாட்டுக்கு வரவுள்ளது. புக்கிங் ஆரம்பித்து விட்டார்களாம். வித்தியாசமான ஐடியா என்பதால் ஆர்வமும் அதிகமாக உள்ளது.