”சிசேரியன்” செய்தால் தொற்று நோய் அபாயம் அதிகம்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஜெனிவா: பெண்கள் தேவையில்லாமல் அதிக அளவில் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்து கொள்வதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிள் மருத்துவ அவசியம் ஏற்படாத நிலையிலும் பலர் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் மகப்பேறு சுகாதார துறையின் இயக்குனர் மர்லீன் தெரிவித்துள்ளார்.
ஆனால் வளர்ச்சியடையாத பல நாடுகளில் சரியான நேரத்தில் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்ய முடியாமல் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.
பிரேசிலில்தான் அதிகம்:
பிரேசில் போன்ற நாடுகளில் 53 சதவீதம் பிரசவங்கள் அறுவைசிகிச்சை மூலம் நடப்பதாக தெரியவந்துள்ளது. பிரசவம் என்றாலே அறுவைசிகிச்சை என்ற கலாச்சாரம் பல நாடுகளில் நிலவுவதாகவும் மார்லீன் கூறியுள்ளார்.
பத்துக்கு மேல் கூடவே கூடாது:
ஆனால் ஒரு நாட்டில் மகப்பேறு அறுவைசிகிச்சையின் சதவீதம் 10 முதல் 15 சதவீதம் வரைதான் இருக்கவேண்டும்.
தொடரும் உயிர் இழப்புகள்:
அதேபோல் இந்த அளவு 10 சதவீதத்துக்கு கீழே இருந்தால், சரியான நேரத்தில் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்ய முடியாமல் உயிர் இழப்புகள் ஏற்படுவதாக அர்த்தம்.
அமெரிக்காவிலும் அதிகம்:
2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு படி ஐரோப்பாவில் 23 சதவீதமும், அமெரிக்காவில் 35 சதவீதமும் மகப்பேறு அறுவைசிகிச்சைகள் நடக்கின்றன.
ஆசியாவில் பரவாயில்லை:
ஆனால் ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இது முறையே 3.8 மற்றும் 8.8 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.