பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல் - பிரதமர் மோடி, ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம்
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 7 முக்கிய பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 160க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இக்கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் மோடி:
"பாரிசில் இருந்துவரும் செய்திகள் வேதனை அளிப்பதாகவும், மிகவும் வருத்தமளிப்பதாகவும் அமைந்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் எங்களது பிரார்த்தனைகளும் இணைந்திருக்கும். இந்த துக்ககரமான நேரத்தில் பிரான்ஸ் மக்களுடன் நாங்கள் ஒன்றிணைந்து நிற்போம்" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
News from Paris is anguishing & dreadful. Prayers with families of the deceased. We are united with people of France in this tragic hour.
— Narendra Modi (@narendramodi) November 13, 2015
அமெரிக்க அதிபர் ஒபாமா:
"பயங்கரவாதிகள் மீண்டும் ஒருமுறை அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் பிரான்ஸ் மீதானது மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான தாக்குதல். இத்தருணத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஹாலண்டே மிகவும் பரபரப்பாக இருப்பார் என்பதால் இப்போதைக்கு நான் அவருடன் தொலைபேசியில் பேசுவதில்லை என முடிவெடுத்துள்ளேன். இருப்பினும், பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து நீதியை நிலைநாட்ட அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
ஐ.நா - பான் கிமூன்:
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கிமூன், "பாரீஸில் பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதற்கு என் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். பட்லாகா தியேட்டரின் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொது மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கேமரூன்:
"பிரான்சிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கின்றோம்" என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே:
பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே கூறுகையில், "இது மனிதநேய மற்ற செயல். ஒற்றுமையாக இருந்து இந்த தாக்குதலை முறியடிப்போம். எவ்வித கருணையும் இன்றி இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு எதிராக போராடுவோம்" என தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, "புத்தியில்லாத பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதல் இது. மக்களை துன்புறுத்தும் இது போன்ற தாக்குதல்கள் கடுமையாக கண்டிக்கத் தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
Strongly condemn the terrorist attack in Paris. My thoughts & prayers are with the people of France in this hour of grief and anguish
— Office of RG (@OfficeOfRG) November 14, 2015
ராகுல் காந்தி:
காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தி, "பாரிஸில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கின்றேன். இந்த சோகத் தருணத்தில் என் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் பாரிஸ் நகர மக்களுடன் துணை இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.