இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 17 வருடம் ஆகியாச்சு.. 1100 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாத சோகம்
Recommended Video
வாஷிங்டன்: அமெரிக்காவில் இரட்டை கோபுரம், அல்கொய்தா தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டு 17 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. விமானத்தை கடத்தி சென்று இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் தாக்கியிருந்தனர்.
இந்த சம்பவத்தில் பலியான 1,100 பயணிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. நியூயார்க் ஆய்வகத்தில் இன்னும் கூட அந்த உடல்களை அடையாளம் காணும் பணி என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் பலியானோரின் உடல்கள் எரிந்து, சிதைந்து யாருடைய உடல் எது என்பதை அறிய முடியாத அளவிற்கு உருக்குலைந்து போயிருந்தது தான் இந்த தாமதத்திற்கு காரணம்.
டிஎன்ஏ சோதனை
கொல்லப்பட்டவர்களின் எலும்புகளை எடுத்து டிஎன்ஏ சோதனை நடத்திய போதிலும் கூட இன்னும் அதில் ஆய்வாளர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த விபத்தில் பல்வேறு காரணிகள், டிஎன்ஏ என்ன என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு நிலைமையை மோசமாகி உள்ளன. தீ, விமான எரிபொருள், சூரிய வெப்பம், பாக்டீரியா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த விபத்தில் தொடர்பு கொண்டுள்ளன என்பதால், டிஎன்ஏ கூறுகள் அழிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கிறார் ஆய்வு கூடத்தில் உள்ள விஞ்ஞானி ஒருவர்.
அடையாளம் காணப்பட்டது
இந்த கொடூர தாக்குதலில் மொத்தம் 2 ஆயிரத்து 753 பேர் பலியாகி இருந்தனர். அதில் 1642 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவில் நான்கு விமானங்களை கடத்திய அல்கொய்தா தீவிரவாதிகள், இரண்டு விமானங்களை உலக வர்த்தக மைய இரட்டை கோபுரத்தின் மீது மோத செய்தனர்.
வணிக கட்டிடம்
இதில் மொத்த கட்டிடமும் தரைமட்டம் ஆனது. இரண்டு விமானங்களிலும் இருந்த பயணிகள் 147 பேரும் வணிக மையக் கட்டிடத்தில் இருந்த 2606 பேரும் பலியாகினர். மற்றொரு விமானத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோத செய்தனர். அதில் விமானத்திலிருந்து 59 பேர் பென்டகனில் இருந்த 125 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்க மக்கள் மனம்
கடத்தப்பட்ட நான்காவது விமானத்தில் பயணித்த, பயணிகள் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டை போட்டனர். இந்த மோதலால் தீவிரவாதிகள் நினைத்த இலக்கை தாக்க முடியவில்லை. சாங்ஸ்வில் என்ற இடத்தில் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்தது. இதில் 40 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அமெரிக்க மக்கள் மனதில் ஆறாத ரணமாகிவிட்டது.
ஒசாமா பின்லேடன்
ஆனால், மீண்டு எழுந்த அமெரிக்கா, அல்கொய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனை வேட்டையாட தேடியது. 2011ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றன. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா முற்றிலுமாக விழிப்படைந்து, தனது பாதுகாப்பு பல மடங்கு அதிகரித்தது. இதன் பிறகு அமெரிக்காவில் எந்த ஒரு தீவிரவாத தாக்குதல் நடைபெறவில்லை. இரட்டை கோபுர தாக்குதலில் இன்னும் மர்மம் நீடிப்பதாக ஒரு தரப்பு கூறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.