தென் கொரியாவில் அசத்தல்.. வந்தது 5ஜி சேவை.. இந்தியாவில் எப்போது?
Recommended Video
சியோல்: உலகிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் 5 ஜி சேவையை தென்கொரியா வழங்கத் தொடங்கியது. இந்தியாவில், இந்தாண்டு 5ஜி சேவை தொடங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று அங்கு 5 ஜி சேவைகள் தொடங்கப்பட இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றிரவே, தென்கொரியா நாடு முழுவதும் 5ஜி சேவை தொடங்கி வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வெரிசோன், '5 ஜி' இணையக் கைப்பேசிச் சேவையை வழங்கும் முதல் நிறுவனமாக உள்ளது.
தென்கொரியாவில் துவக்கம்
எஸ்.கே.டெலிகாம், கே.டி., எல்ஜி யூபிளஸ் ஆகிய நிறுவனங்கள் இச்சேவையை தென்கொரியாவில் வழங்குகின்றன. அமெரிக்காவின் வெரிசோன் நிறுவனம், 5ஜி சேவையை அந்நாட்டில் தொடங்கியதை அடுத்தே, தென்கொரியா அவசர அவசரமாக இரவில் இச்சேவையை தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
5ஜி வாடிக்கையாளர்கள்
ஒலிம்பிக் பனிச்சறுக்கில் தங்கம் வென்ற வீராங்கனையான கிம் யுனா மற்றும் எக்சோ பேண்ட் இசைக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் உலகின் முதல் 5ஜி வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என எஸ்.கே.டெலிகாம் கூறியுள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவை
இந்தியாவில் 5ஜி சேவையின் தொடக்கம் தாமதமாகலாம் என்றே கருதப்படுகிறது. இருப்பினும் இந்த ஆண்டிலேயே முதல் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாக வாய்ப்புள்ளது. ஆனால் 2019 அல்லது 2020 ல் தான் நாடு முழுவதும் 5ஜி தொலைத்தொடர்புக்கான கட்டமைப்பு வசதிகள் ஓரளவு நிறைவடையும் எனக் கூறப்படுகிறது. இதற்கான அலைக்கற்றை ஏலத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையில் இந்தியாவில் 5ஜி கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஜியோ, வோடஃபோன், ஐடியா தொடங்க உள்ளது.
ஷாங்காய் நகரம்
5ஜி நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் சேவையை பெற்ற உலகின் முதல் மாவட்டமாக சீனாவின் ஷாங்காய் இருக்கிறது . தற்போதைய 4ஜி எல்.டி.இ. நெட்வொர்க்களை விட 5ஜி சேவையை பயன்படுத்தும் போது டவுன்லோடு வேகம் 10 முதல் 100 மடங்குவரை அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஷாங்காய் மாவட்டத்தில் 5ஜி சிக்னல் பரப்பளவு மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சீனாவிலும், நாடு முழுவதும் 5ஜி சேவை அளிக்கப்படும் என தெரிகிறது.