தொட்டால் ‘கால்’ உணரும்... அசர வைக்கும் ஆஸ்திரிய விஞ்ஞானி!
வியன்னா: உலகிலேயே முதன்முறையாக உணர்ச்சியுள்ள செயற்கைக் கால்களை உருவாக்கி, சோதனை முறையில் வெற்றியும் பெற்றுள்ளார் ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானி.
வடக்கு ஆஸ்திரியாவில் உள்ள லின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹூபெர்ட் எக்கர் என்பவர் தான் இதனை உருவாக்கியுள்ளார்.
இவர் ஏற்கனவே, கடந்த 2010ம் ஆண்டு மனதின் கட்டளைப்படி இயங்கக் கூடிய செயற்கைக் கைகளை உருவாக்கி சாதனை புரிந்தவர். நியூட்ரான் மற்றும் மோட்டாரின் உதவி கொண்டு அந்த செயற்கைக் கைகளை அவர் உருவாக்கி இருந்தார்.
வரப்பிரசாதம்...
இந்நிலையில், தற்போது விபத்து அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் கால்களை இழந்தவர்களுக்கு உணர்ச்சியுடைய இந்தக் கால்களின் கண்டுபிடிப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
சிமுலேட்டர்...
இந்த முறையின் படி, முதலில் துண்டிக்கப்பட்ட காலின் நரம்புகள் ஒன்று சேர்க்கப்படுகின்றன. பின்னர் அவை தொடைப்பகுதியில் உள்ள திசுக்களுடன் இணைக்கப்படுகின்றன. பின்னர் அவை செயற்கைக் காலில் உள்ள சிமுலேட்டருடன் இணைக்கப்படுகின்றன.
6 சென்சார்...
இந்த செயற்கைக் காலில் உணர்ச்சிகளைக் கடத்தக் கூடிய 6 சென்சார் மற்றும் சிமுலேட்டர் உள்ளது. அதன் மூலம் நல்ல நரம்புகளில் உள்ள உணர்ச்சிகள் சிமுலேட்டர் மூலம் கடத்தப்படுகின்றன.
மறுவாழ்வு..
கால்களை இழந்தவர்களுக்கு இந்த புதிய செயற்கைக் கால்கள் மறுபிறவி அளிப்பதாக கூறுகிறார் 54 வயதான உல்ப்ஹாங் ரேங்கர் என்ற ஆசிரியர். கடந்த 2007ம் ஆண்டு ஸ்ட்ரோக் ஏற்பட்டதன் காரணமாக தனது வலது காலை இழந்தவர் உல்ப். இவர் தற்போது இந்த உணார்ச்சியுள்ள செயற்கை கால்கள் மூலம் மீண்டும் தனது வாழ்க்கை புத்துணர்வு பெற்றுள்ளதாகக் கூறுகிறார்.
ஓடவும், நடக்கவும் முடியும்...
ஆறு மாத கால சோதனை மூலம் இந்த புதிய செயற்கைக் கால்களை எக்கர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தரையில் உள்ள கல், மண் உள்ளிட்ட சின்னச் சின்னப் பொருட்களைக் கூட உணர முடிகிறது. இதனால், பயமின்றி ஓடவும், நடக்கவும், சைக்கிள் ஓட்டவும் முடிவதாக உல்ப் அனுபவப் பூர்வமாகக் கூறுகிறார்.
எளிமையான முறை...
எளிமையான முறையில் இந்த உணர்வுள்ள செயற்கைக் கால்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த செயற்கைக் கால்களைத் தயாரிப்பதற்கு 10 ஆயிரம் யூரோவில் இருந்து, 30 யூரோ வரை செலவு ஆகிறதாம். அதாவது இந்திய மதிப்பில் 7 லட்ச ரூபாயில் இருந்து 21 லட்ச ரூபாய் ஆகும்.