பலாத்காரக் கொடுமைக்குள்ளான ஆண்களுக்கும் காப்பகம்.. ஸ்வீடனில் அதிரடி!
ஸ்டாக்ஹோம்: பாலியல் ரீதியிலான பாதிப்புகளை சந்திக்கும் ஆண்களுக்கும் தனியாக காப்பகம் ஒன்று ஸ்வீடனில் தொடங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இணையாக ஆண்களும் பாலியல் வன்முறையைச் சந்தித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கும் போதிய பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதைத் தொடங்கியுள்ள ஸ்வீடன் நாட்டு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உலகிலேயே பாலியல் பாதிப்புக்குள்ளான ஆண்களுக்காக தனி காப்பகம் தொடங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஆண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத ஸ்வீடன்
ஐரோப்பிய நாடுகளிலேயே ஸ்வீடனில்தான் பாலியல் பலாத்காரங்கள் அதிகம். அதுவும் பெண்களைப் போலவே ஆண்களும் அதிக அளவில் பாலியல் பலாத்கார சித்திரவதைக்குள்ளாவது இங்கு அதிகம்.
ஸ்டாக்ஹோம் மருத்துவமனை
இந்த நிலையில்தான் ஸ்டாக்ஹோமில் உள்ள சோடர்ஸ்ஜுகூஸ்ட் மருத்துவமனை தனியாக ஒரு காப்பகத்தை தொடங்கியுள்ளது. இது ஒரு 24 மணி நேர கிளினிக்காகவும் செயல்படும்.
24 மணி நேர கிளினிக்
இந்த காப்பகத்தில் ஆண்கள் மட்டுமல்லாமல் பலாத்காரக் கொடுமைக்குள்ளாகும் பெண்களும் கூட பலன் பெற முடியும். 24 மணி நேரமும் இந்த கிளினிக் - காப்பகம் செயல்படுமாம்.
ஆண்டுக்கு 700 பேர்
இந்த மருத்துவமனைக்கு ஆண்டுக்கு 600 முதல் 700 பாலியல் பலாத்கார பாதிப்புக்குள்ளான நோயாளிகள் சிகிச்சைக்காகவும், உதவிக்காகவும் வருகிறார்களாம். அதிலும் ஆண்களும் கணிசமான அளவில் வருகிறார்களாம்.
370 ஆண்கள்
கடந்த ஆண்டு ஸ்வீடனில் 370 ஆண்கள் பாலியல் பலாத்கார கொடுமைக்குள்ளானதாக அரசுத் தகவல் தெரிவிக்கிறது. ஆனால் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று தேசிய குற்றத் தடுப்புக் கவுன்சில் கூறுகிறது.