டிரைவர் இல்லாமல் இயங்கக்கூடிய தானியங்கி டாக்சி...முதன் முதலில் சிங்கப்பூரில் அறிமுகம் !
சிங்கப்பூர்: டிரைவர் இல்லாமல் தானாக இயங்க கூடிய கார் சேவையை நியுடோனோமி நிறுவனம் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிரைவர் இல்லாமல் தானாக இயங்கக்கூடிய கார்களை உருவாக்கும் முயற்சியில் கூகுள், உபேர், டெஸ்லா போன்ற பல்வேறு முண்ணனி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மற்ற நிறுவனங்களுக்கு முன்னரே தானியங்கி டாக்சி சேவையை நியுடோனோமி நிறுவனம் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய சேவை மூலம் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் இயங்கும் கார்களை வாடிக்கையாளர்கள் அழைக்கலாம். ஆனால் இது முதல் கட்ட முயற்சி என்பதால், பாதுகாப்பிற்காக டிரைவர் ஒருவரும் காரில் இருப்பார். ஆனால் அவர் காரை இயக்க மாட்டார்.
ஒருவேளை தானியங்கி தொழில்நுட்பம் செயலிழந்துவிட்டாலோ, தவறுகள் ஏதேனும் நடந்தாலே மட்டும் அந்த நேரத்தில் டிரைவர் காரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார். ஏற்கனவே உபேர் நிறுவனம் அமெரிக்காவின் ஒரு மாகாணத்தில் மட்டும் தானியங்கி கார் சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தது.
கார் சேவை மட்டுமல்லாது தானியங்கி டிரக்குகளும் தற்போது சோதனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தங்கள் நிறுவனத்தின் செயலியை கைபேசியில் தரவிறக்கம் செய்து, சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் வரையிலான இந்த டாக்சி சேவையின் வெள்ளோட்டத்தில் பொதுமக்களும் இலவசமாக பங்கேற்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இன்றைய சோதனை ஓட்டத்தில் சிலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தானியங்கி டாக்சியில் இலவசமாக பயணம் செய்த அனுபவம் மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.