சாஹோலி மரணம்.. சோகத்தில் மூர்க்கனாக மாறிய காவன்.. கம்போடியாவிற்கு அனுப்ப பாக். முடிவு!
பாகிஸ்தானில் தனிமையில் வாழ்ந்து வந்த காவன் எனும் யானை கம்போடியா நாட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தனிமையில் வாழ்ந்து வந்த காவன் எனும் யானை கம்போடியா நாட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அதன் தனிமை வாழ்க்கை முடிவுக்கு வர உள்ளது.
யானைகளே இல்லாத பாகிஸ்தானுக்கு கடந்த 1985ம் ஆண்டு காவன் எனும் ஆண் யானையை இலங்கை பரிசாக வழங்கியது. இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலையில் வைத்து இந்த யானை பராமரிக்கப்பட்டு வந்தது. பிறகு இந்த யானைக்கு துணையாக சாஹோலி எனும் பெண் யானையை கடந்த 1990ம் ஆண்டு இலங்கை வழங்கியது.
இரண்டு யானைகளும் இஸ்லாமாபாத் மிருக்காட்சி சாலையில் இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு பெண் யானை சாஹோலி உயிரிழந்தது. அதன் பிறகு தனி கொட்டகையில் தனிமை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது காவன். இதனால் காவன் மிகுந்த மன சோர்வுக்கு ஆளானது. காவனின் உடல் நிலையும் மோசமானது.
ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்: தந்தை பார்டனராக உள்ள நகைக் கடையை 'கன்னம்' வைத்த மகன்!
வைரல் புகைப்படம்
தனிமையில் தவித்து வந்த காவனுக்கு மூர்க்கத்தனம் அதிகமானது. எனவே அதனை சங்கிலியால் கட்டி வைத்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த யானை, சுவரில் தலையை மோதிக்கொண்டது. இந்த புகைப்படம் 2015ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து காவன் யானைக்கு ஆதரவாக பல குரல்கள் ஒலிக்க தொடங்கின.
தீர்ப்பு
பிரபல பாப் பாடகி செர், காவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதுதொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், யானையை விடுவித்து விடலாம் என கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது.
முயற்சி
இதையடுத்து காவன் யானையை கம்போடியாவுக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஃபோர் பாவ்ஸ் எனும் யானைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த முயற்சியில் ஈடுபட்டது. யானைக்கு பாடல்களை பாடி அதன் மன சோர்வை போக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
இடமாற்றம்
இதற்கு நல்ல பலன் கிடைக்கவே, காவன் யானையை கம்போடியாவுக்கு மாற்றும் முயற்சிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். யானைக்கு நடைபெற்ற பரிசோதனையில், அது அதிக உடல் எடையுடன் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அதனை வேறு இடத்துக்கு மாற்றுவதில் எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காவன் யானை கூடிய விரைவில் கம்போடியாவுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.