உலகின் நீண்டகால வெளியுறவுத்துறை அமைச்சர்.. சவுதியின் சவுத் அல்-பைசல் மரணம்!
ரியாத்: உலகின் மிக நீண்ட கால வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரும், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுடன், இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவை நெருங்கச் செய்தவருமான சவுத் அல்-பைசல் மரணமடைந்தார். அவருக்கு வயது 75.
சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக 1975ம் ஆண்டு பதவியேற்றவர் சவுத் அல்-பைசல். அவரது அறிவுத்திறமை காரணமாக, தொடர்ந்து 40 ஆண்டுகாலமாக அப்பதவியை அவரே அலங்கரித்தார். கடந்த ஏப்ரல் 29ம் தேதி, உடல் நிலை காரணமாக, பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் சவுத் அல்-பைசல் மரணமடைந்தார். சவுதி அரேபியாவின் அரசு ஊடகமும் இதை உறுதி செய்துள்ளது. இருப்பினும் மரணத்துக்கான காரணம் கூறப்படவில்லை. 75 வயதான சவுத் அல்-பைசல் சமீபகாலமாக உடல்நிலை நலிந்து காணப்பட்டார். முதுகில் மேற்கொள்ளப்பட்ட பல அறுவை சிகிச்சைகளால், உபகரணங்கள் உதவியுடன் நடமாடி வந்தார்.
அவர் ஓய்வு பெறும்போது, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் "சவுத் அல்-பைசல் உலகின் நீண்டகால வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டுமல்ல, அறிவில் சிறந்த அமைச்சரும் அவர்தான்" என்று கூறிய வார்த்தை இவரது பெருமையை பறைசாற்றும்.
செல்வச்செழிப்பு கொண்ட சவுதி அரேபியாவை, பிற நாடுகளுடன் இணக்கமாக இருக்க செய்தது, குறிப்பாக மேலைநாடுகளுடன் சவுதியை நல்லுறவு கொள்ள செய்ததில் இவரது பங்கு முக்கியமானது.