உலக 'நாட்டாமை' ஐ.நா.வுக்கு 70வது பிறந்த நாள்! உலகமே நீல வண்ணமாக மாறப்போகிறது
நியூயார்க்: உலக நாடுகளின் நாட்டாமை என்று வர்ணிக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) 70 வருடங்கள் நிறைவடைய உள்ளன. இதை உலகமெங்கும் உள்ள பல அமைப்புகள் நீல வண்ண தினமாக கொண்டாட திட்டமிட்டு அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளன.
இரண்டு உலகப்போர் நடந்து முடிந்துவிட்ட காலகட்டம் அது. பெரும் மனித உயிர் இழப்பும், நிதி இழப்பையும் சந்தித்து துடித்துக்கொண்டிருந்தனர் உலக மக்கள்.
போரை தடுக்கும் அமைப்பு
மற்றொரு உலகப்போர் நடைபெற்றுவிடக் கூடாது என மக்கள் அஞ்சத் தொடங்கினர். அவ்வாறு மீண்டும் ஒரு போர் மூண்டால் மனிதகுலம் தாங்காது எனக்கருதியதால் போரை தடுத்து நாடுகளிடையே நல்ல உறவை பேணச் செய்ய, வலிமையான ஒரு அமைப்பு தேவைப்பட்டது
மாநாடு போட்டனர்
1943ம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்கா, சீனா, பிரிட்டீஷ், ரஷ்யா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மாஸ்கோவில் ஒன்றுகூடி, உலகில் அமைதியை ஏற்படுத்த ஒரு தனி அமைப்பை அமைக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் விளைவாக 1945ல் சான்பிரான்சிஸ்கோ மாநாடு நடைபெற்றது. இதில் 50 நாடுகள் கலந்துகொண்டன.
சாசனம் உருவாக்கம்
மாநாட்டின் முடிவுப்படி, அக்டோபர் 24ம் நாள் ஐக்கிய நாடுகள் அமைப்பு நிறுவப்பட்டது. இதற்கென தனி சாசனம் வரையப்பட்டது. அதில் அமைப்பின் நோக்கம், அதில் அமைக்கப்பட்ட சபைகள், அவற்றின் செயல்கள் ஆகியனபற்றித் தெளிவாகக் கூறப்பட்டன.
உலக அமைதி
கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல், பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல், மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல், மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் போன்ற நிபந்தனைகள் அந்த சாசனத்தில் இடம்பெற்றிருந்தன.
பிற நாட்டு விவகாரம்
இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தையும் சமமாக மதிப்பது, உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும், உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது போன்ற நிபந்தனைகளும் அந்த சாசனத்தில் இடம்பெற்றிருந்தன.
193 உறுப்பு நாடுகள்
51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946ல், லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 2011ம் ஆண்டில் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று ஐ.நா வில் இணைந்தது. அதையும் சேர்த்தால் தற்போது வரை இவ்வமைப்பில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன.
சர்ச்சைகள்
உலகின் மிகப்பெரிய அமைப்பாக இது பார்க்கப்படுகிறது. பல்வேறு சமயங்களில் வல்லரசுகளின் கைப்பாவையாக செயல்படுவதாக ஐ.நா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும், போர் அபாய சூழல்கள் பலவற்றை தடுத்து உயிர்களை காத்த பெருமை ஐ.நா.வுக்கு உண்டு.
எல்லாம் நீல வண்ணம்
இந்நிலையில், ஐ.நா. ஆரம்பிக்கப்பட்ட 70வது ஆண்டு விழா வரும் 24ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, உலகின் 60 நாடுகளிலுள்ள 200 புகழ்பெற்ற இடங்கள் ப்ளூ வண்ணமாக மாற்றப்பட உள்ளது. பிரேசிலுள்ள புகழ்பெற்ற மலைமீது நிற்கும் ஏசுநாதர் சிலை, இத்தாலியுள்ள பைசா சாய்ந்த கோபுரம், ரஷ்யாவிலுள்ள ஹெர்மிடேஜ் மியூசியம், எகிப்தின் பிரமீடுகள், சிட்னி ஓபரா ஹவுஸ் போன்ற பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் நீல வண்ண விளக்குகளாலும், வர்ணங்களாலும் அலங்கரிக்கப்பட உள்ளன.
நாட்டாமை தீர்ப்ப சொல்லுங்க
ஐ.நா.வின் கொடி மற்றும் அதன் இலச்சினை போன்றவை நீல வண்ணம் கொண்டவை என்பதால் உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் கூடி இம்முடிவை எடுத்துள்ளன. கொண்டாட்டம் எல்லாம் சரிதான். இனியாவது, அடிக்கடி 'நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க..' என்ற கூக்குரல் ஐ.நா.வை நோக்கி எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.