71 சடலங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட 2ம் உலகப் போரில் மாயமான நீர்மூழ்கிக் கப்பல்!
லண்டன்: இரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கிக் கப்பலொன்று, 71 சடலங்களுடன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போர் என்பது 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற போர் ஆகும். இதில் உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. சமீபத்தில் தான் இரண்டாம் உலகப்போரின் 71வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதற்கிடையே அவ்வப்போது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆங்காங்கே கிடைத்து வருகின்றன. சமீபத்தில் இங்கிலாந்தில் இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காமல் கிடந்த 225 கிலோ வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க வைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இங்கிலாந்துக்குச் சொந்தமான இரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, 71 உடல்களுடன் டவோலாரா தீவுக்கருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலானது கடந்த 1942ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மால்டாவிற்குச் சென்று அங்கு தனது முதல் தாக்குதலை நடத்தியது. அப்போது இரண்டு இத்தாலிய போர்க்கப்பல்களைத் தாக்கி அது அழித்துள்ளது.
ஆனால், அந்த நீர்மூழ்கிக் கப்பலிடம் இருந்து டிசம்பர் 31ம் தேதிக்குப் பின் சிக்னல்கள் ஏதும் வரவில்லை. இதனால், அந்த நீர் மூழ்கிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் என இங்கிலாந்து கப்பற்படை முடிவு செய்தது.
இந்நிலையில், தற்போது இந்தக் கப்பலானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக சேதரமின்றி, இந்தக் கப்பல் நல்ல நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவத்தின் போது அந்தக் கப்பலில் இருந்த 71 வீரர்களின் உடலும் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
1299 டன் எடை கொண்ட இந்த கப்பலானது, கடலில் 100 மீட்டர் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது.