மண்டேலாவின் வாழ்க்கை மகாத்மா காந்தியை நினைவூட்டுகிறது: பிரணாப் புகழஞ்சலி!
ஜோகன்னெஸ்பர்க்: மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் நட்பையும், அன்பையும் இந்தியா என்றும் நினைவில் வைத்திருக்கும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். மண்டேலாவின் வாழ்க்கை மகாத்மா காந்தியை நினைவூட்டுகிறது என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (95) ஜோகன்னெஸ்பர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 5ஆம் தேதி நள்ளிரவு மரணம் அடைந்தார். இதையடுத்து உலக தலைவர்கள் அனைவரும் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தலைமையில் இந்திய குழுவினர் தென்ஆப்ரிக்காவிற்குச் சென்றுள்ளனர். ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று நடைபெற்ற பிராத்தனை கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்திய மக்கள் சார்பாக, நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
நிலையான அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை செய்த போற்றுதலுக்கு உரிய தலைவர் நெல்சன் மண்டேலா, அநீதிக்கு எதிரான தனது சத்தியாகிரக போராட்டத்தை இறுதி வரை உறுதியாக தொடர்ந்தவர்.
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் முன்மாதிரியாக நெல்சன் மண்டேலா திகழ்ந்தார். மண்டேலாவின் வாழ்க்கை மகாத்மா காந்தியை நினைவுபடுத்துகிறது.
மண்டேலாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதில் இந்தியா பெருமைப்படுகிறது. மண்டேலாவின் நட்பையும், அன்பையும் இந்தியா என்றும் நினைவில் வைத்திருக்கும்.
பிரார்த்தனை நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொள்வது, மண்டேலா எந்த அளவுக்கு இந்தியாவின் மீது அன்பும் மதிப்பும் வைத்திருந்தார் என்பதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்றும் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டார்.